இலக்கியச்சோலை

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்!….நூல்வெளியீடு .

தமிழ்ச்சிற்றிதழ்களில் இன்று மாபெரும் வகையில் நவீன படைப்புக்கள் வெளிவருகின்றன.

தமிழகத்திலிருந்து வரும் சிற்றிதழ்கள் சுமார் 300 இதழ்களிலிருந்து படைப்புக்கள் ஆராயப்பட்டு அவை கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயச்சந்திரன் அவர்கள், நூலினைக் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகக் காணலாம்.

வாழ்த்துரை

முனைவர் ஜெ.ஜெயச்சந்திரன்.
முதல்வர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

இலக்கியங்கள் வாழ்வின் ரசனைத் தன்மையை மிகுத்து நடத்தைகளின் மேல் பெரும் லயித்தலை ஏற்படுத்துகின்றன. இவ்வித லயிப்புத்தன்மை உலகிலுள்ள எல்லாவற்றின் பூரணத் தன்மையையும் மென்மையாக்கி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எளிமையாகவும், சிறப்பாகவும் ஆக்குகின்றன.

நூல்கள்,அறிவிற்கு வழிகாட்டிகளாகி பெரு வெளியை ஒவ்வொரு வருக்குள்ளும் ஏற்படுத்தும் தன்மையன. அவைகள் வழி வழியான சிந்தனைகளின் வடிகால்கள். அவற்றைச் சமூகம் காலந்தோறும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தானம் அளிக்க வேண்டும்.
இவ்வகையில், நமது கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பாரதி சந்திரன் (முனைவர் செ.சு.நா சந்திரசேகரன்) “தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்” எனும் நூலைக் கொண்டு வந்துள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். தற்பொழுது பல நூல்களுக்குச் சொந்தக்காரர். இணையதளங்களிலும் சிற்றிதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், கவிதை, சிறுகதை போன்ற படைப்புகளையும் தொடர்ந்து எழுதி வருகின்ற படைப்பாளி அவர்

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகவும் சிறப்பாகச் செயலாற்றும் தன்மை கொண்டவர்
.
இந்நூலில், சிற்றிதழ்களில் காணலாகும் நவீன இலக்கிய வளத்தைத் தமிழ் மக்களுக்கு இனம் காட்டியுள்ளார். ஆழமான, அகலமான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. கவிதைகளின் தன்மை, உருவாக்கம், வெளிப்பாட்டுத் திறன், வாசகர் அவதானிப்பு, சிற்றிதழ்களில் பிற கலைகள் என விரிந்த நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ஒரு கட்டுரையானது விளக்க முறைத் திறனாய்விலும் ‌, மற்றொரு கட்டுரையானது சமுதாயவியல் திறனாய்விலும், இன்னொரு கட்டுரை இஸங்களின் அடிப்படைத் திறனாய்விலும் என இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்கும் நவீனத் திறனாய்வுகள் பல கையாளப் பெற்று ஆய்வு செய்து இருப்பதனால் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு விரிந்த திறனாய்வுக் திறன் கிடைக்கும்

பயன் மிக்கதான நூல்கள் எல்லாராலும் பாதுகாக்க பெரும். சிற்றிதழ்கள் குறித்த நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவருவது மிகக் குறைவாக இருப்பதாகவே கருகிறோம் .ஆனால் சிற்றிதழ்கள் தான் மிகப் பெரும் இலக்கிய சேவையினைச் செய்கின்றன என்கின்றார் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் சொர்க்கபுரியாகச் சிற்றிதழ்கள் இருக்கின்றன. இது போன்ற இதழ்கள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்தோடு போட்டி போட்டு வளரும் என்று நாம் நம்புகின்றோம். அந்நிலை தமிழ் சமூகத்தில் உருவாக வேண்டும்
இதன் படைப்புகளும் இன்றும் ஆய்வாளர்களால் நிறைய ஆய்வு செய்யப்படவேண்டும். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சிப் படிப்பைக் கொண்டுள்ள கல்வி நிறுவனங்களும் நவீன இலக்கியத்தின் வாழ்விடமாக உள்ள சிற்றிதழ்களின் இலக்கிய வளத்தை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் .அதற்குப் பேராசிரியர் பாரதி சந்திரனின் இது போன்ற நூல்கள் அடித்தளமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இலக்கியப் படைப்பாளர்களும் ஆய்வாளர்களும், சிற்றிதழ் ஆசிரியர்களும் , நவீன இலக்கியத்தைத் தேடும் வாசகர்களும், நூல் சேகரிப்பாளர்களும், இந்நூலை வாங்கி பயன்பெறலாம். மிகப் பயனுள்ள நூலாக இந்தப் “படைப்புத் திறனும் ஏற்பு கோட்பாடும்” என்ற இந்த நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை
.
பேராசிரியர் பாரதிசந்திரன் இன்னும் இது போன்ற சிறப்பான நூல்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு நிறையத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த நூல் விரைவில் இ புத்தகமாக வெளிவரும். பதிப்பில் பெற 9283275782 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் உலகம் சிற்றிதழ் பொக்கிசமான இந்த நூலையும் பாதுகாக்கும் என நம்புகிறேன்

அன்பன்,
பாரதிசந்திரன்(9283275782)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button