கவிதைகள்
ஒரு பொழுதும் இப்பொழுதும்!… ( கவிதை ) … சுதர்சன்.

உனக்கும் எனக்குமான
ஒரு கீதத்தை இசைத்தேன்.
அலைநுரைப் பூக்கள் அர்ச்சித்தன.
மலைகள் கம்பீரத்தைப் பெருக்கின.
கங்கைகளும் கடல்களும் நீரமுதாயின.
ஒளி பெருக்கி நின்றது வானம்.
கொடிகளுக்காகவே காற்று வீசிற்று.
நிலமோ நிமிர்ந்தெழுந்தது.
நீயோ…
உனக்கு மட்டுமான
கீதம் இசைத்தாய்!
அலைகள் இசைப்பதை நிறுத்தின.
மலைகள் கம்பீரத்தைக் கழற்றின.
கங்கைகளும் கடல்களும் நீரற்றுப் போயின.
இருள் விரித்து நின்றது வானம்.
காற்று வீசாது கொடிகளுக்கு என்ன வேலை!
நிலமோ மல்லாந்து படுத்தது.
ஒரு பொழுதும்…
இப்பொழுதும்…
மகத்தான கீதம் எதுவாயிற்று?
……………………………………………….
04/02/2021 செ. சுதர்சன்
![]()