கவிதைகள்

நெஞ்சிலே இறையின் நாமம் நீள் புவி வாழவைக்கும்!… ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஆசைகள் அகன்று போக
 
 ஆணவம் அழிந்து போக

அகமெலாம்  இறையின் நாமம்

அரணென நிறைந்து நிற்க 

 

வாய்மையே ஓங்கி நிற்க 

வன்முறை மடிந்து போக

தாய்மையே எழுந்து நிற்க

தரணியே சிறந்து நிற்கும்  !

 

வேற்றுமை விலகிப் போக

விரக்தியும் வெருண்டு ஓட

சாற்றிடும் வார்த்தை எல்லாம்

சன்மார்க்கம் நிறைந்து நிற்க

 

தூற்றிடும் குணமும் மாழ

துட்டரின் மனமும் மாற

ஏற்றியே போற்றி நிற்போம்

இறையது நாமம் நாளும்  !

 

வறுமையும் வரண்டே போக

சிறுமையும் சிதைந்தே போக

பொறுமையும் எழுந்து நிற்க

புகலுவோம் இறையின் நாமம்

 

நெறியினை நேர்மை ஆக்கு

நீதியை பாதை ஆக்கு

நெஞ்சிலே இறையின் நாமம்

நீள் புவி வாழவைக்கும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *