சிக்கல் யாவும் மறைந்துபோகா!…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

உள்ளத்தில் குதிபோடும் எண்ணக் கலவையாவும்
ஒப்பிலா உயர்நோக்கம் கொண்டு நின்றாலவையும்
இங்குலாவும் இனியதுவும் எவ்விடத்தும் நிறைவுகொண்டே
பங்குபெறு வகையில் பல்வளமும் சூழ்ந்து பரந்திங்கிலங்கிடுமே ![]()
கொல்லவரும் ஒருகூற்றை நல்விதமாய் தவிர்த்திடலும்
வல்வினைகள் ஓங்குதற்கு வரம்புகட்டு காத்திடல்போல்
தொல்லைமிகு சாத்திரங்கள் தொண்மை சாய்ந்துநிற்க
இல்லையொரு தொல்லையென இயம்பி நிற்கலாகாதோ
கல்லை புல்லெனவெண்ணி கரையானும் அரித்திடுமோ
வில்லைப் புறந்தள்ளி வெகுகாலம் வீரமென்றாலாகிடுமா
நல்லதொரு வேளையிலே நலங்காண நாடிச்சென்றால்
இல்லையொரு வாசகமும் இங்கில்லை என்பாருமுண்டோ
தங்குதடையின்றி தகவுகள் சாட்சியாய்
கூறிநிற்கும்
பொங்குநிலை மிகுந்துநிற்க பூபாளமுமே
எங்கும் கேட்கும்
சிங்கக் குகையினூடே சிறுநரியும் சென்றங்காடினால்
பங்கமென எதுவும் நிகழாதெனில் பாரிலதும் சாத்தியமோ
மிகைமதி மிளிர்நாளில் மீட்டுமொரு வீணையிசைக்கும்
தகையறா செயல்கள் யாவும் தனித்திங்கு மங்கிநிற்கும்
குகையிரு கொடும்பிராணி கூற்றுவனை
காட்டுதல்போல்
சிகையினினில் ஒழித்துநின்றால் சிக்கல் யாவும் மறைந்துபோகா!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()