கவிதைகள்
முகமும் புலமும்!…. கவிதை.

ஒரே ஊர் ஒரே பாடசாலை ஒரே கோயில் ஒரே விளையாட்டு மைதானம் நண்பர்கள் அயல் வீடு ஒத்த இடம் பெயர்வு என ஊரே கூடி வாழ்ந்த காலம் அது ஒரு கனாக்காலம்.
காலம் நகர அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்ப சூழ் நிலை எங்களுக்கு முன்பாகவே அவர்கள் புலம் பெயர்ந்து எங்கோ ஒரு அந்நிய நாட்டில் குடியமர்ந்தார்கள் வாழ்க்கை அவர்கள் வசமாக கொஞ்சம் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள்.
நமக்கு விதி வகுத்த வழி போரில் உழன்று வருந்தி சிதைந்து சிறைப்பட்டு வாழும் போதே பல பழைய நினைவுகளை அசை மீட்டுவோம்.
பக்கத்து வீட்டு காரர் எங்கே இருப்பார், நண்பன் எங்கே இருப்பான் கற்பித்த ஆசிரியர்கள் எங்கே இருப்பார்கள் நாம் சுற்றி வந்த நண்பி எங்கே எத்தனை குழந்தைகளுடன் எந்த நாட்டில் வாழ்வாள், போராட சென்ற நண்பன் நண்பி எங்கே இருக்கிறார்களா? இல்லையா? இப்படியே காலம் கடந்து பயணித்து நாமும் புலம் பெயர் தேசம் வந்த போதும் ஒரு சிலரை தவிர மற்றவர்களை சந்திக்க முடியவில்லை இந்த அங்கலாய்ப்பு தொடர்கையில் கிடைத்த கொடை தான் முக நூல்.
முக நூல் நாம் தேடிய பல உறவுகளை இணைத்த போதும் பல உறவுகள், ஒரே ஊரவர் நண்பர்களாக, தெரிந்தவர்களாக ஊரில் இருந்தவர்களை முக நூலில் தேடி நட்பு கோரிக்கை அனுப்பி போதாக்குறைக்கு நான், யார், என்ற தகவல் அனுப்பி காத்திருந்த போதும் நமது கோரிக்கையை நட்பை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு சிலர் முக நூலில் இணைந்து ஒரு சில நாட்களிலேயே நட்பை முறித்துக் கொண்டார்கள் அவர்கள் முதலில் கேட்பது
என்ன வேலை செய்கிறாய், வதிவிட அனுமதி உண்டா? மகிழுந்து உண்டா? வீடு வாங்கி விட்டாயா?
இதை வைத்தே அவர்கள் நட்பை, உறவை தீர்மானிக்கிறார்கள் நம்மிடம் வசதி வாய்ப்பு இல்லை என்றால் நட்பை முறித்து கொள்கிறார்கள் சிலரோ தாங்கள் புலம் பெயர் நாடுகளின் பூர்வீக குடிகள் என்ற நினைப்பில் நம்மை கண்டு கொள்வதில்லை.
என்ன ஒரு வித்தியாசம் அவர்கள் நமக்கு சில வருடங்கள் முந்தி வந்திருப்பார்கள் நாம் போரில் அகப்பட்டு எல்லாவற்றையும் அனுபவித்து வந்துள்ளோம்.
மற்றும்படி அவரும் இங்கு வந்து சொன்னது அகதி நான் வந்து சொன்னதும் அகதி
அவர்கள் முந்தி வந்ததால் கொஞ்சம் வசதி வாய்ப்பு நாங்கள் பிந்தி வந்ததால் வசதி வாய்ப்பு கிடைப்பதற்கு கொஞ்ச காலம் செல்லும்.
அவர்கள் பத்து வருடம் முந்தி வந்து செய்யும் தொழிலும் பத்து வருடம் பிந்தி வந்து செய்யும் தொழிலும் ஒன்றுதான் உங்கள் மங்கிய புத்தியை கொஞ்சம் தீட்டி கொள்ளுங்கள்.
வெளி நாட்டு சட்ட திட்டங்கள் ஜனாதிபதிகளின் கைகளிலேயே உண்டு ஒரு வேளை நீங்களும் நாங்களும் அதே ஊரில் மீண்டும் வாழ வேண்டி வரும்.
வெளிநாட்டில் நிலமை கொரோணோவுக்கு மத்தியில், பின்னர் என்ற நிலையில் பயணிக்க தொடங்கியுள்ளது சில நாடுகளில் வதிவிட உருமைகள் பறிக்கப்பட தொடங்கியுள்ளது, வேலை நீக்கம் மறுபக்கம் எதுவும் நமது கையில் இல்லை ஆகவே பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வாழ்வில் நலி சிறந்தது எதுவும் எப்போதும் நமது கையில் இல்லை ஆகவே உறவுகளை நட்புகளை மதித்து நடப்போம்.
![]()