அநீதியை எவ்வாறு கேட்பாய்?

ஒரு கோடு நாட்டைப் பிரிக்கிறது
எல்லைக்கு இருபுறமும்
இருநாடுகள்
ஒரு வாசலால் இரண்டிற்கும் பயனுண்டு
வெளியலிருந்து உள்ளே செல்ல
உள்ளிருந்து வெளியே வர
வீட்டு வாசல் பள்ளிக்கூட வாசல்
கல்லூரி வாசல் கோவில் வாசல்
இப்படி எண்ணற்ற வாசலில் ஏறி இறங்கி விட்டேன்
ஒரு வாசலில் மட்டும் உள்ளே போகும் போது ஒரு காட்சி
வெளியே வரும்போது பேசிற்று மனசாட்சி
எனக்கென்ன என்று இருந்திடவும் முடியவில்லை
எடுத்துக்கூறாது மறைப்பதும் ஏற்றதில்லை
குறை என்று நினத்தால் இகழ்ந்திடுவீர்
நிறை என்று நினைத்தால் புகழ்திடுவீர்
இந்த இடத்தில் மட்டும் இரு வேறு விபரீதங்கள்
கோவில் வாசலுக்கு வெளியிலும் ஒருவர் கையில் தட்டு
கோவில் வாசலுக்கு உள்ளேயும்
ஒருவர் கையில் தட்டு
காப்பவன் கண்முன்னே அநீதி காணக் கிடக்கிறது
ஒருவன் கேட்கிறான் அங்கே கொடுப்பதில்லை
இன்னொருவன் கேட்பதில்லை அங்கே கொடுக்கிறார்கள்
கண்முன்னே நீதி கண்ணுறங்கி
நிற்கும்போது
கண்தெரியா இடத்தே உலவும் அநீதியை எவ்வாறு கேட்பாய்?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()