கவிதைகள்

ஆர்வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

  மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்   

                            தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது 

                      புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா 

                             என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   ! 

                      கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது

                             ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது 

                      வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே

                             நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க ! 

                     வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை 

                             வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு 

                    வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால் 

                              வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  ! 

                    பழம்வாங்கப் போவதற்கும் பயமாக இருக்கிறது

                         கிழப்பருவம் எய்தியவர் குலைநடுங்கி நிற்கின்றார் 

                  கொரனோவை எண்ணியெண்ணி கொண்டிருந்த மகிழ்வனைத்தும்

                         அடியோடு கலையும்நிலை ஆர்வருவார் வரவேற்க  ! 

                 கைதொட்டுப் பேசிவிட  கலங்கிநிற்கும்  காலமிது 

                      மெய்தீண்டும் நிலைவந்தால் விலகுப்போகும் காலமிது 

                கைதொட்டு மெய்யணைத்து ஆசிகூறும் நிலையின்று

                       கட்டுண்டு கிடப்பதனால் யார்வருவார் வரவேற்க  ! 

                  சிறப்பான பட்டிமன்றம் சீரான கவியரங்கு 

                       இன்னிசையால் கச்சேரி ஏற்றமுறும் கலைவிழாக்கள் 

                 சித்திரைய அலங்கரிக்கும் அத்தனையும் நின்றாச்சு 

                       ஆர்வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க ! 

    

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *