அனைவருமே அமைதியுடன் இருந்திடவே நினைப்போம்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் மனது![]()
சிரிப்புடனே உலாபோக எழுந்துவரு முணர்வு
அத்தனையும் இப்போ அடங்கிவிடும் நிலைமை
ஆரிடத்து நோவோம் ஆர்க்கெடுத்து உரைப்போம் !
புத்துடப்பு வாங்க வோவென்னும் மனது
போனாலே துன்பம் வருமென்னும் உணர்வு
எத்தனையே உயிர்பிரியும் இக்கால நிலைமை
எப்போது மாறுமென யாருரைப்பார் எமக்கு !
பட்டாசு வாங்குதற்கு விரும்புகின்ற பிள்ளை
பட்சணங்கள் செய்வதற்கு விரும்புகின்ற பாட்டி
கஷ்டநிலை தெரியாமல் கதையுரைக்கும் தாத்தா
அத்தனை மனதேற்றி ஆரிடத்து உரைப்போம் !
நாட்டுநிலை தெரியாமல் நடைபயிலும் மாமா
நடுவீட்டினிலே தலைவிரிக்கும் நம்முடைய மாமி
சீட்டுக்கட்டி ஓலமிடும் சித்தப்பா சித்தி
காட்டுகின்ற காட்சியினை யார்வருவார் காண !
அப்பாவாய் அம்மாவாய் அகமிருக்கும் நாங்கள்
ஆசைபல இருந்தாலும் அடக்குகிறோம் இப்போ
குடும்பத்துக் குதூகலத்தைக் குறைக்க மனமில்லை
குவலயத்து நிலையெம்மை குழப்பிருக்கு இப்போ !
திண்டாட்ட தருமணதில் கொண்டாட்டம் எதற்கு
வண்டாகத் திரிந்தவர்கள் வாடுகிறார் சிறையில்
அண்டிநிற்கும் இருளனைத்தும் அகன்றுவிடும் வரைக்கும்
அனைவருமே அமைதியுடன் இருந்திடவே நினைப்போம் !
![]()