உலகம்

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஈரான் குழுவினருக்கு அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலும், நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரானிய மூத்த அதிகாரிகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 

உலக அமைப்பான ஐ.நா.வை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவின் கடமைகளுக்கு ஏற்ப, “ஈரானிய ஆட்சியின் முதன்மைப் பிரதிநிதிகள் குழு” கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்த முடிவின்படி, ஈரானியஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விசா வழங்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியது.

 

இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரான் தலைவர்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

“பிரதிநிதிகள் குழுவிற்குப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும் எங்களது கொள்கையின்படி ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வாங்கத் தடை விதிக்கப்படும். இக்குழு கடந்த ஆண்டை விடச் சிறியதாகும்” என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.

 

கடந்த காலங்களில், ஈரானியப் பிரதிநிதிகள் குழு கடைகளுக்குச் செல்வதை அமெரிக்க அரசு தடை செய்திருந்ததுடன், ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம், ஈரானிய ஐ.நா தூதரகம், ஐ.நா தூதரின் இல்லம் மற்றும் நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையேயான பயணத்திற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *