அடக்கு முறைக்கு எதிரான சகல சக்திகளையும் செப் . 12 இல் அநுராதபுரத்தில் ஒன்றிணைப்போம்; அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியோம்

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.சிறைச்சாலைகளையும் , நீதிமன்றத்தையும் காட்டி எம்மை அச்சுறுத்த முடியாது.அரசாங்கத்தின் ஊழல், பொய்,அடக்கு முறைக்கு எதிரான சகல சக்திகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றிணைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ஸ சூளுரைத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர்
மேலும் பேசுகையில்,
ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகவும், ஊழல்வாதிகளை கைது செய்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மூடி மறைக்கப்படுகின்றன. 19 கொள்கலன்களில் தரமற்ற நிலக்கரிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 462 கோடி பெறுமதியான 1 இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் நிலக்கரி தொகை காணாமல் போயுள்ளது. யார் இந்த நிலக்கரியை கொள்ளையடித்தது என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும்.
திறைசேரியில் இருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மாயமாகியுள்ளது. தனியார் வங்கிகளிலும் மோசடிகள் இடம்பெறுகின்றன.இவற்றை அலட்சியப்படுத்த முடியாது. இதன் பின்னணியில் அரசாங்கத்தின் முன்னணியில் உள்ள உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
அநுராதபுர நகரில் நாங்கள் கூட்டத்தை நடத்துவோம். அரசாங்கத்தின் பொய், ஊழல் மோசடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக அநுராதபுர கூட்டத்தில் மக்களை ஒன்றிணைப்போம். அடக்கு முறைக்கு அச்சமடைந்து எமது போராட்டத்தை கைவிட போவதில்லை. அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் சிறைச்சாலைகளையும் , நீதிமன்றத்தையும் காட்டி எம்மை அச்சுறுத்த முடியாது.
அரசாங்கத்தின் ஊழல், பொய்,அடக்கு முறைக்கு எதிரான சகல சக்திகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றிணைப்போம் என்றார்.
![]()