உக்ரைன் மீது ரஷ்யா தாக்கியதில் 6 பேர் பலி ; பதிலடியாக 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல்களில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தரப்பும் பதிலடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், குறித்த ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட தரப்புகள் மேற்கொண்ட பல்வேறு சமரச முயற்சிகள் இதுவரை எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமான ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களால் பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
![]()