உலகம்

குளிர்காலத்தை கடக்க பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை கோருகிறார் ஜெலென்ஸ்கி

குளிர்காலத்தில் ரஷ்யா தீவிரமான தாக்குதல்களை முன்னெடுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குமாறு உக்ரைன் கோரியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, குளிர்காலத்தைக் கடப்பதற்கு அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளில் ஐந்து சதவீதமும், ரஷ்யாவின் அனைத்து பாலிஸ்டிக் எறிகணைகளையும் அழிப்பதற்கு 10 சதவீதமும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா சமீபகாலமாக, உக்ரைனின் தலைநகரான கீவ் மீது வாரத்திற்கு ஒருமுறை எனத் தொடர்ச்சியாகப் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன.

ஒரு தாக்குதலில், தன் மீது ஏவப்பட்ட 28 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்றைக்கூட உக்ரைனால் இடைமறிக்க முடியவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெலென்ஸ்கி, அமெரிக்கா ஐந்து சதவிகிதம் விற்றால், நாங்கள் இந்தக் குளிர்காலத்தைக் கடந்து, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஈரான் உடனான போரில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button