சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம்; ஈழத் தமிழர் முன்னணி கூறுகிறது

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன். அவருக்கு நினைவுத் தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்கக் கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,
மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சிக் காரியாலயம் திறந்து செயல்பட்டுவருகின்றோம். எங்களின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியை கிழக்கு மண்ணில் இருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. சிலருக்கு இது ஏளனமாக இருக்கும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.
இலங்கை தமிழரசு கட்சி, மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன். எனவே அந்த நினைவுத் தூபி அமைப்பது என்பது அவர்களது சொந்த இடங்களிலேயே அமைக்க வேண்டும்,பொது இடத்தில் அமைக்கக் கூடாது.
இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும் பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை அகற்றுவதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வோம்.
அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை நாங்கள் அறிவிக்கின்றோம். இருந்தபோதும் அவர்கள்,தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அந்தச் சிலையை அமைக்க முயன்றால் அது அகற்றப்படும் என உறுதியாக கூறிக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()