கவிதைகள்

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்!…. கவிதை… ஜெயராமசர்மா

ஆடை இன்றி அவனியில் பிறந்தோம்
ஆசை இன்றி பிறந்தவர் இல்லை
ஆசை என்னும் தொட்டிலில் அனைவரும்
ஆடி ஆடியே அவனியில் உழல்கிறோம்

கருவில் தொடரும் ஆசை என்பது
பெருகிப் பெருகிப் பெருங்கடல் ஆகுது
பெருங்கடல் எழுகின்ற பேராசை அலைகள்
எழும்பிக் குதித்து சதிராட்டம் போடுது

மண்ணில் ஆசை பெண்ணில் ஆசை
மணி மகுடத்தைச் சூடவும் ஆசை
எண்ணில் அடங்கா ஆசைகள் எழுந்து
எம்மை இழுத்து இன்னற்குள் வீழ்த்துதே

வரமும் உரமும் பெற்றவர் பலரும்
அனைத்தும் இழந்தனர் அவரது ஆசையால்
காவியம் கதைகள் ஆசையின் அவலம்
செப்பிடும் திறத்தை சிந்தையில் வைப்போம்

மாபெரும் மன்னர் மடிந்தனர் ஆசையால்
மாபெரும் ராஜ்ஜியம் அழிந்தது ஆசையால்
ஆளுமை மிக்கவர் அழிவதும் ஆசையால்
ஆசையை அணைத்தால் அனைவர்க்கும் அழிவே

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
அப்போதே சொன்னார் திருமூலச் சித்தர்
அப்போது சொன்னது எப்போதும் பொருந்தும்
சித்தரின் வாக்கைச் சிந்தையில் இருத்துவோம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button