இலங்கை

எதிரணிகளை ஒன்றிணைக்க நாமல், ரோஹித புதிய வியூகம் – A Team – Next Wave உதயம்

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒன்றிணைக்கும் நோக்கில், “ஏ ரீம் – நெக்ஸ்ட் வேவ்” (A Team – Next Wave) என்ற பெயரிலான புதிய அரசியல் தளம் ஒன்றை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுராத ஜயரத்ன, டி. வி. சானக மற்றும் சானக மதுகொட ஆகியோர் ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அரசு கொண்டுள்ள பெரும்பான்மை பலம் காரணமாக, அங்கு தங்களது கருத்துக்களைச் சரியாகப் பிரதிபலிக்க முடியாத அரசியல் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்குக் குரல் கொடுப்பதே இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத அரசியல் குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, தேசிய பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் குரல் எழுப்ப இந்த முன்முயற்சி செயற்படும். அத்துடன், பரந்தளவிலான ஓர் அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்காகப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் பிரதிநிதிகளை இந்த ஒரே மேடையில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிகள், வரிச்சுமை மற்றும் விவசாயிகள், மீனவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அனுபவமிக்க ஓர் அரசியல் குழு நாட்டுக்கு அவசியமாகவுள்ளது.

இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை மாற்றியமைக்கும் நோக்கில், அனைத்து எதிர்க்கட்சிச் சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுப் படையைக் கட்டியெழுப்பி, அதனை நாட்டின் அடுத்த தேசியக் குழுவாக மாற்றுவதே இந்தத் தளத்தின் நீண்டகால இலக்காகும்.” – என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button