கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!…  தொடர் – 07…. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

ஷிண்டோ மதத்தில் சிவப்பு நிறம் பாதுகாப்பைக் கொடுக்கும் நிறமாகும். தீய சக்தி, நோய் மற்றும் விபத்து நடக்காமலிருக்க வேண்டுபவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு கிட்சுயூனுக்கு ( நரி சிற்பம்) கழுத்தில் மேககே (சிவப்பு துணி) என்பதை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

ஷிண்டோ மதக் கடவுளான இனாரியோடு சம்மந்தப்பட்ட நரியைப் பற்றிய ஜப்பானிய புரணக்கதைகள் நிறையவே உள்ளன. ஆவி அல்லது உயிர் என்றும் உருவமோ ஆண் பெண் தன்மையோ இல்லாத அழிவற்ற ஒரு ஆற்றல் என்று என் வாசிப்பில் ஏற்பட்ட அனுபவித்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

புராணக்கதைகள் என்றாலே வளர்ந்த நாடுகள் பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆனால் வளர்ந்த நாடுகள் அதை புராணக்கதைகளாக மட்டுமே பார்த்துவிட்டு முன்னேற்றத்தில் முன்னேறிப் போய்க்கொண்டே இருப்பார்கள். பின்தங்கிய நாடுகள் புராணக்கதைகளை கதைகளாக மட்டும் பார்க்காமல் அதிலேயே மூழ்கி இளம் சமுதாயத்தையும் மூழ்கவைத்து விடுகிறார்கள்.

முன்னேற்றம் பற்றிய எண்ணத்துக்கு மூடுவிழா நடத்துகிறார்கள். முன்னேற்றம் என்றால் அணு ஆயுதங்கள் மற்றும் பரிசோதனையில் விண்வெளிக்கு விண்கலங்களை வானுக்கு அனுப்புவதிலும் மட்டும் இல்லை. நாட்டு மக்கள் இருக்க இடமும் உடுக்க உடையும் பசி பட்டினி இல்லாமல் இருப்பதும்தான் உண்மையான முன்னேற்றம்.

அது இல்லாத முன்னேற்றம், பெற்றோரை பிச்சைஎடுக்க வைத்துவிட்டு அன்னதானம் செய்வதற்கு ஒப்பாகும். நான் சொல்வதை மாடசாமி அண்ணாச்சி ஏற்றுக் கொள்வார் என்று எண்ணுகிறேன். என்னைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருப்பீர்கள். அடிக்கடி கட்டுரையிலிருந்து தடம்புரள்வேன். இது மதிமயங்கிய தடம் புரள்வது கிடையாது. மதுநுட்பமான தடம் புரள்வுதான்.

இந்த கிட்சுயூன் என்ற ஜப்பானிய மொழியில் அறியப்படும நரிகளான ஆன்மாக்கள் தூதுவர்களாகவும் பாதுகாவலளராகவும் இருக்கும். இவை குறும்பத்தனம் மற்றும் ஏமாற்றி தீங்கிழைக்கக் கூடியதாகவும்கூட இருக்கும். இவைகளைப் பற்றிய விசித்திரமான செய்திகளை இப்போது சொல்கிறேன். இவைகளுக்கு பல நூற்றாண்டுகள் வாழும்போது சக்தியும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

நரிக்கதை என்றாலே பாட்டி வடை சுட அதை காக்கா எடுத்துக்கொண்டு போய் மரத்தில் அமர அதை நரி ஏமாற்றிய கதையும் திராட்சைப் பழத்துக்கு ஆசைப்பட்ட நரி கொடியில் தொங்கும் திராட்சைக் கொத்தை எட்டிப் பிடிக்க முயன்று தோற்றுப் போனதால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லிச்சென்ற நரியின் கதைகளுமே நம்மிடம் ஏராளம்.

ஆதலால் நான் நரி பற்றி சொன்னால் அது நம் இரத்த அணுக்களிலேயே இருப்பதால் நரி கதை உங்களுக்கு பிடிக்காமலா போகும்? சென்னையில் என் நண்பர் ஒருவர் கொத்தவால் சாவடியையையே தாண்டாதவர் என்ன பொருள் வாங்கினாலும் மேட் இன் ஜப்பான் என்று அலட்டிக் கொள்வார். அவர் மகிழ்ச்சி அடைவதைப்போல் நானும் உங்களுக்கு ஐப்பானியரின் புராணக் கதையை சொல்லி சிறிது அலட்டிக் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

இந்த நரிகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் வயதாகும்போது வாலின் எண்ணிக்கை ஒன்பது ஆவதுடன் மாபெரும் சக்தியடைகின்றன. அது எப்படி நரி ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் அதற்கு எப்படி ஒன்பது வால்கள் வரை முளைக்கும் என்று கேள்வி கேட்கக்கூடாது. ஏனென்றால் அது புராணக்கதை.

நமது புராணக் கதைகளில் தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்றும் தேவேந்திரனுக்கு உடலில் ஆயிரம் கண்கள், மந்திர மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தார்கள் என்றால் நம்புகிறோம் அல்லவா அப்படித்தான் இதுவும்.

கிட்சுயூனின் வயது நூறைத் தாண்டும்போது அவை உருமாறும் தன்மையைப் பெறுகிறது. மனித உருமாற்றத்தில் இளஞ் சிறுமிகளாகவும் அழகிய பெண்ணாகவும் முதியவர்களாகவும் மாறக்கூடியது. இது தவிர சில புராணக் கதைகளின்படி அவை ராட்சதர்களாகவும் மாறும். இவை விவசாயத்தைப் பாதுகாக்கும் கடவுளுக்கு கருணையுடன் தொண்டாற்றக் கூடியதாகவும் தொண்டர்களாகவும் குறும்புத்தனமும் கொடூரமும் கொண்டவைகளாகவும் இருக்கும்.

இவை கொடூரமான நரியாக மாறும்போது மனிதர்களை ஏமாற்றித் தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கும். இவை மனித உருவெடுத்து இருந்தாலும் இவை நரிகள் என்பதை நாய்கள் கண்டு பிடித்துவிடும். ஆதலால் நாய்களைக் கண்டால் இந்த மாற்று உருவில் இருக்கும் நாய்கள் பயப்படும். நம் ஊரிலும் நாயின் கண்களுக்கு பேய் தெரியும் என்று சொல்வார்கள்அல்லவா?.

இதை இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். ஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி இருப்பதாக நம்புவது எல்லா இடத்திலும் நம்புகிறவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. நல்ல ஆவி தீங்கு எதுவும் செய்யாது கெட்ட ஆவி தீங்கு செய்யும் என்று நம்புகிறார்கள்.

நல்ல ஆவி குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதே செய்யும் கெட்ட ஆவி கெட்டதைத்தான் செய்யும் என்று நம்புவதால்தான் இரண்டு ஆவிகளுக்கும் பூஜை செய்கிறார்கள். அப்படிச் செய்வதுதான் நம் உறவில் இறந்தவர்களை எண்ணி வணங்குவது. தீய சக்திகளாக பேய், பிசாசு மற்றும் மோகினி என்றும் பார்க்கிறார்கள்.

பில்லி சூனியம் வைப்பதும் அதற்காக குறளி மற்றும் குட்டிச்சாத்தான்களை ஏவி விடுவதும் தீய சக்திகளாகப் பார்க்கப் படுகிறது. இந்த தீய சக்திகளுக்கான மாய மந்நிரத்துக்கு சூலி மற்றும் காளி உதவுவதுபோலவும் அதற்காக வணங்குவது போலவும் இந்த தீயசக்தி உடைய நரிகளை எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றில் பியூசிமி இனாரி டெய்ஷாவில் இருக்கும் விவசாயத்தைக் காக்கும் பெண் கடவுளான இனாரியின் தொண்டர்களான தூதர்கள்தான் இந்த கிட்சியூன் என்ற நரி சிற்பங்கள்.

V0045066 Kali; standing triumphantly over Shiva. Chromolitho
Credit: Wellcome Library, London. Wellcome Images
images@wellcome.ac.uk
http://wellcomeimages.org
Kali standing triumphantly over Shiva. Chromolithograph.
Published: [n.d.]
Copyrighted work available under Creative Commons Attribution only licence CC BY 4.0 http://creativecommons.org/licenses/by/4.0/
இத்தனை அபூர்வங்களையும் கொண்ட பியூசிமி இனாரி டெய்ஷாவின் நுழையுமிடத்தில் இருக்கும் டோரிகேட்டைப் போன்றே மழையேறுவதற்கு வசதியாக படிகளுடன் வழியாக வரிசையாக ஒன்றையடுத்து ஒன்றாக நிறைய டோரிகேட்டுகள் இருக்கும். ஒவ்வொரு டோரிகேட்டும் வேண்டுதல் நிறைவேறியவர்கள் காணிக்கையாக கொடுத்து நிறுவியவையாகும்.

(தொடரும்….)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button