செம்மணியில் புதிதாக ஏழு எலும்புக் கூடுகள்; இதுவரை 394 எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 29 ஆம் நாள் அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 394 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 370 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக நீதி அமைச்சர் மற்றும் காணாமல் போனோர் பற்றிய அலுவலக ஆணையாளர்களும் வந்து பார்வையிட்டனர் – என்றார்.
![]()