இலங்கை

திருமலை கடற்படை முகாம் ‘கன் சைட்’ நிலத்தடி சிறைச்சாலை; விசாரணை அறிக்கையை 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில் திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுளளார்.

புதன்கிழமை (17) இந்தச் சிறைச்சாலைக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தின் காணொளிப் பதிவுகளையும், புகைப்படங்களையும் இணைத்து சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதினொரு இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை மற்றும் பலரை கடத்தி சித்திரவதை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகவே, நீதிபதி இந்த கள விசாரணையை மேற்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்புதன்கிழமை(18) முதல் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மேலதிக விசாரணைகளில் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button