பலதும் பத்தும்

பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாதீங்க!

பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாமல் ஊதுபத்தி முதல் சோப் வரை பல பயனுள்ள பொருட்களை செய்ய முடியும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வீட்டில் பூஜை செஞ்சதுக்கு அப்புறம் பூக்களை என்ன பண்றீங்க? ஒரு நாள்ல வாடிப்போனதும் தூக்கி குப்பையில போடுறீங்களா? இனிமே அப்படி செய்யாதீங்க. அந்த காய்ந்த பூக்களை வெச்சு பல பயனுள்ள பொருட்களை செய்யலாம். அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

பூஜைக்குப் பயன்படுத்திய காய்ந்த பூக்களை வைத்து ஊதுவத்தி அல்லது சாம்பிராணி செய்யலாம். காய்ந்த பூக்களை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதை சின்ன சின்ன கூம்புகளாகவோ அல்லது ஊதுவத்தி போலவோ வடிவமைத்து, மீண்டும் பூஜைக்கே பயன்படுத்தலாம்.

காய்ந்த பூக்களின் இதழ்களை வைத்து, நீங்களே ஆர்கானிக் மற்றும் வாசனை சோப் தயாரிக்கலாம். உங்கள் வழக்கமான சோப்பைத் துருவி, லேசாக உருக்கிக்கொள்ளுங்கள். அதில், காய்ந்த பூக்களின் இதழ்களைச் சேர்க்கவும். குறிப்பாக ரோஜா, செம்பருத்தி இதழ்கள் நல்ல வாசனையைத் தரும். மேலும், இது சருமத்திற்கும் நல்லது.

காய்ந்த பூக்களை வைத்து ரெசின் ஆர்ட் போன்ற கிரியேட்டிவ்வான விஷயங்களையும் செய்யலாம். குழந்தைகள் கிராஃப்ட், நகைகள், கோஸ்டர்கள் அல்லது போட்டோ ஃபிரேம் செய்யும்போது இந்தப் பூக்களைப் பயன்படுத்தலாம். அதன் மேல் ரெசின் திரவத்தை ஊற்றினால், அது எளிதாக செட் ஆகி, அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

ரோஜா, செம்பருத்தி போன்ற சில பூக்களை ஹெர்பல் டீ தயாரிக்கவும் பயன்படுத்தலாம். பூக்களின் இதழ்களைத் தனியாக எடுத்து, வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். அது இளஞ்சூடாக ஆனதும், வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து ஹெர்பல் டீயாகப் பருகலாம்.

வீட்டை அலங்கரிக்க அழகான மெழுகுவர்த்திகள் செய்ய ஆசையா? அப்போ இந்த காய்ந்த பூக்களைப் பயன்படுத்தலாம். மெழுகுவர்த்தியை உருக்கி, அதில் காய்ந்த பூக்களின் இதழ்களைச் சேர்க்கலாம். அல்லது மெழுகுவர்த்தியின் வெளிப்புறத்தில் காய்ந்த பூக்களை வைத்து அலங்கரித்து அழகான தோற்றத்தைக் கொடுக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button