இந்தியா

தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விஜய் இன்று மாலை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பிரசாரத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்கும் போது, அவர்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று, சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட, தமிழ்நாட்டு மக்களுக்கான கழகத் தேர்தல் அறிக்கையைக் கழகத் தலைவர் விஜய் வெளியிட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனவே, கியூ.ஆர். கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் தவிர்த்து, வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அனைவரும் தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பாடசாலை மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *