அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!…. கவிதை…. ஜெயராமசர்மா

அனுபவம் என்பது அனைவர்க்கு மவசியம்
அனுபவம் அனைத்துக்கும் அடிப் படையாகும்
அனுபவ மற்றார் ஆற்றும் அனைத்தும்
ஆக்கமாய் அமைவது அரிதே யாகும்
மூத்தோர் யாவரும் அனுபவம் மிக்கவர்
வீழ்ந்து எழுந்து நிமிர்ந்து நின்றவர்
துன்பமும் தெரிந்தவர் இன்பமும் தெரிந்தவர்
சுகமும் துக்கமும் தாங்கியே நின்றவர்
விரைவாய் எதனையும் செய்யும் வேளை
அனுபவ மற்றார் அவசரப் படுவார்
அனுபவ மிக்கவர் விரைவாய் செயினும்
அவசரப் படாமல் சிறப்புடன் செய்வார்
இளமை என்பது துடிப்பான பருவம்
அனுபவம் தொடங்கும் ஆரம்பப் பருவம்
இளமை முதுமையை எய்திடும் காலம்
பற்பல அனுபவம் பாங்காய் இணையும்

அனுபவம் முதுமையின் ஆளுமை யாகும்
ஆளுமை வழியில் நடப்பது அவசியம்
இளமையில் ஆளுமை மிக்கவ ராயினும்
முதுமையின் அனுபவம் இளமையை உயர்த்தும்
இளமையில் இமயம் தொட்டவர் இருக்கிறார்
இமயம் தொட்டிட பயிற்சிகள் அவசியம்
பயிற்சிகள் என்பதே அனுபவ மாகும்
பயிற்சியை வழங்குவோர் முதிர்ச்சியில் இருப்பார்
போட்டிகள் நடுவர் அனுபவம் மிக்கார்
அனுபவம் மிக்கார் இளமையில் நிற்கார்
அறிவுரை வழங்க அனுபவம் அவசியம்
அறிவுரை வழங்குவார் முதியோர் ஆகிறார்
மூத்தோர் வார்த்தை அமுதம் என்பது
காலம் காலமாய் காதிலே ஒலிக்குது
அதனுடை அர்த்தம் அனுபவம் என்பதை
அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
மூத்தோர் சொல்லும் முதுநெல்லி கனியும் முதலில் துவக்கும். பின்னர் இனிக்கும்.