பலதும் பத்தும்

2027-இல் உலக வெப்ப நிலை புதிய உச்சத்தைத் தொடலாம்: ‘எல் நினோ’ தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை !

பூமியின் காலநிலை இதுவரை கண்டிராத ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் “மீள முடியாத” அழிவை நோக்கிச் செல்வதாகவும் உலக வானிலை அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளியிடப்பட்ட ‘உலகளாவிய காலநிலையின் நிலை’ என்ற அந்த அறிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியே உலகின் வரலாற்றில் பதிவான மிக வெப்பமான 11 ஆண்டுகளாகும்.

கடந்த 2025 ஆம் ஆண்டானது 1850 களுக்குப் பின்னர் பதிவான 2 ஆவது அல்லது 3 ஆவது மிக வெப்பமான ஆண்டாகக் கருதப்படுகிறது.

புவி வெப்பமடைதலுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 1.43°C அதிகமாகப் பதிவாகியுள்ளது.

பூமி சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தை விடவும் குறைவான வெப்பத்தையே விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது. வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஒக்சைட்டு, மீத்தேன் போன்ற வாயுக்கள் கடந்த 8 இலட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதால், பூமி அதிகப்படியான வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.

இந்த அதிகப்படியான வெப்பத்தில் 91 சதவீதத்தை சமுத்திரங்களே உறிஞ்சுகின்றன. இதனால் கடல் நீர் வெப்பமடைதல் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் அபாயகரமாக அதிகரித்து வருகின்றது.

1993 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 இல் கடல் மட்டம் சுமார் 11 சென்றிமீற்றர் அதிகரித்துள்ளது. இது கடலோர நகரங்கள் மற்றும் சிறிய தீவு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “பூமி தனது எல்லைகளைக் கடந்து தள்ளப்படுகிறது. காலநிலை குறிகாட்டிகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இது தற்செயலானது அல்ல, இது செயல்படுவதற்கான ஒரு அழைப்பு எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் ‘லா நினா’ காலநிலை மாறி, 2026 ஆம் ஆண்டின் இறுதியில் ‘எல் நினோ’ தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்டால், 2027 ஆம் ஆண்டு உலக வெப்பநிலை புதிய உச்சங்களைத் தொடும் என விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, அது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்டுள்ள சவால் என ஐநா எச்சரித்துள்ளது. படிம எரிபொருட்களிலிருந்து விலகி புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை மீண்டுமொருமுறை உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *