முச்சந்தி

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு! ஜனாதிபதி அநுர

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

உலகில் ஏற்படும் எந்தவொரு யுத்தத்தின் போதும் மனிதநேயத்தின் கொடியை முன்னெடுத்துச் செல்லும் தேசம் இலங்கைத் தேசம் என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.

உலகில் எவ்வளவு வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து மக்களையும் பேதமின்றி, பரிவுணர்வுடன் நடத்தும் ஒரு அரசாக மாற்றுவதில் இந்நாட்டு சிறுவர்களும் பெண்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் மகளிர் தின நிகழ்வில் ஜனாதிபதி கூறினார்.

இன்று போதைப்பொருள் இளைஞர்களை விழுங்கி வருவதாகவும், இது தாய்மார்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, தமது பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாவது ஒரு தாய்க்கு வேதனையைத் தருவதாகவும், உறவினர்கள் மத்தியிலும் கிராமத்திலும் பிள்ளை ஒதுக்கப்படுவதனால் தாய்மார்கள் நிர்க்கதியாகியுள்ளனர் எனவும், அதனால் அரசாங்கம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும், போதைப்பொருள் அனர்த்தத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் கூறினார்.

தமது பிள்ளைக்குச் சிறந்த கல்வியை வழங்குவதே தாய்மார்களின் பிரதான எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தாய்மார்களின் மனங்களில் உள்ள பிள்ளையின் கல்விச் சுமையிலிருந்து அவர்களை விடுவிப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பரிவுணர்வுள்ள ஒரு பிள்ளையை உருவாக்கக்கூடிய கல்வி முறையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பெண்களினால் கடனைப் பெறுவதற்குச் சொத்துக்கள் இல்லாவிட்டால், அதற்கான உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்கக்கூடிய வகையிலான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் எனவும், கடனைச் செலுத்தப் பெண்களுக்கு முடியாமல் போனால் அதனை அரசாங்கம் செலுத்தும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

நுண்நிதி கடன்களின் வட்டி காரணமாகக் கிராமங்களில் அதிகளவான பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கிராமப்புறப் பெண்கள் இந்தக் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிலிருந்து பெண்களை மீட்பதற்காகச் சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும், மறுபுறம் திட்டத்தை வெற்றிகரமாகக் கண்காணித்துச் செயற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் சலுகை வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *