முச்சந்தி

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞருக்கு 19 வயது

ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது என முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 19 வயது இளைஞன் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் கட்டளையை மீறி வேன் நேற்றைய தினம் மண்டைதீவு நோக்கி பயணித்த நிலையில் அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வேனை நிறுத்த பொலிஸாரின் ஜீப் முயன்ற போதிலும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு வேனை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வேன் சாரதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தின் போது வேனிலிருந்த மேலும் இருவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர், மற்றும் சித்தன்கேணியைச் சேர்ந்த 25 மற்றும் 38 வயதுடை சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளில் ஏனைய சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியிருந்தமை நீதிபதியின் விசாரணையில் உறுதிப்படுத்திய பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் குறித்த வேனில், 17.5 கிராம் கஞ்சா போதைப்பொருள், வாள், கத்தி, கயிறு மற்றும் விலங்குத் தோல் போன்ற கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *