அண்டனூர் சுரா கட்டுரைகள் தொடர் – 04…. வாசகர்களை நிர்க்கதியாய் நிறுத்திய எழுத்தாளர்…. அண்டனூர் சுரா


ஒரு பள்ளிக்கூடம். மூன்றாம் அடுக்குத் தளம். நான்கு மாணவர்கள் சேர்ந்து பதினான்கு வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து கேசட்டாக்கிக் கும்பலாக பார்த்து ரசிக்கிறார்கள். இது நடக்கும் ஆண்டு 1979. பிறகு ஒரு நாள் அந்த கேசட் தொலைந்து விடுகிறது. அந்த கேசட்டைத் திருடியவன் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறான். அக்கொலையை செய்தவன் பிரிட்ஷ் மாக்கேப். அவன் சிறையில் அடைக்கப்படுகிறான். நீண்ட காலம் சிறையிலிருந்தவன் ஒரு நாள் விடுதலையாகிறான். பழையபடி அவன் தொலைந்த கேசட்டைத் தேடி அலைகிறான். அவனுக்கு உதவி செய்ய ‘கின்சே மில்கோன்’ வருகிறார்.
ஒரு நாள் மில்கோன் கையில் அந்தக் கேசட் சிக்குகிறது. கேசட்டில் பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து சக மாணவியை கற்பழித்தவன் பிரிட்டிஷ் மாக்கேப் மட்டுமல்ல. அவனுடன் இன்னும் மூன்று பேர் என்று தெரிய வருகிறது.
2017 ஆம் ஆண்டு வெளியான Y IS FOR YESTERDAY என்கிற நாவலின் கதைக்கரு இது. இந்நாவலில் கொலையாளிக்கு உதவி செய்யும் ‘கின்சே மில்கோன்’ என்கிற பெண் ஒரு துப்பறிவாளர். இந்நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் அவர்தான். இந்நாவலை எழுதியவர் ‘சூ டைலர் க்ராப்டன்’ என்கிற அமெரிக்கர்.
இந்நாவலை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை. ஆனால் குழந்தைகளுக்குப் பிடித்தமான எழுத்தாளராக சூ க்ராப்டன் அறியப்பட்டார். குழந்தைகளின் அமைதியை குலைக்கும்படியான, பயமூட்டும்படியான கதைகள் அவருடையது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மர்மம், திகில்தான் கதையின் போக்கு. ஆனாலும் குழந்தைகள் அவரைக் கொண்டாட ஒரு காரணம் இருந்தது. அது நாவல்களுக்கு அவர் சூட்டியப் பெயர்கள்!

நம் ஊரில் அன்றைக்கு முதல் இன்றைக்கு வரைக்கும் அகர வரிசை என்பது அ என்றால் அம்மா. ஆ என்றால் ஆடு….ஆனால் ஆங்கிலேய நாடுகளில் அகர வரிசை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கும். அன்றைக்கு அந்த அகர வரிசை A is for apple என்பதாக இருந்தது. அடுத்த தொழிற்நுட்ப காலத்தில் A is for Android என்று மாறியது. சமீப காலத்தில் அவ்வரிசை இவ்வாறானதாக இருக்கிறது.
A IS FOR ALIBI
B IS FOR BURGLAR
C IS FOR CORPSE
D IS FOR DEADBEAT
E IS FOR EVIDENCE
F IS FOR FUGITIVE
G IS FOR GUMSHOE
H IS FOR HOMICIDE
I IS FOR INNOCENT
J IS FOR JUDGMENT
K IS FOR KILLER
L IS FOR LAWLESS
M IS FOR MALICE
N IS FOR NOOSE
O IS FOR OUTLAW
P IS FOR PERIL
Q IS FOR QUARRY
R IS FOR RICOCHET
S IS FOR SILENCE
T IS FOR TRESPASS
U IS FOR UNDERTOW
V IS FOR VENGEANCE
W IS FOR WASTED
X
Y IS FOR YESTERDAY
இத்தனையும் சூ டைலர் க்ராப்டன் எழுதிய நாவல்கள். இந்த வரிசையின் கடைசி நாவல் Z is for Zero. இந்நாவலுக்கானப் பெயரை அவர் முப்பது வருடங்களுக்கு முன்பே சூட்டிவிட்டார். இந்நாவலை எழுதி முடிப்பது ஒன்றே அவரது கனவும் இலட்சியமாகவும் இருந்தது.
இந்நாவலில்தான் அம்மாணவியை கற்பழித்த மற்ற மூன்று பேர் யாரென்றும் மேலும் இருபத்து ஐந்து நாவல் வரிசைகளின் முக்கிய கதாப்பாத்திரமான கின்சே மில்கோன் தன் துப்பறியும் பணியை ராஜினா செய்துவிட்டு அமைதி வாழ்க்கைக்குத் திரும்பப்போவதாக வாசகர்களுக்கு அறிவுறித்திருந்தார். மேலும் இந்நாவல் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று முன் தேதி கொடுத்திருந்தார். இப்படியாக வாசகர்களை பெரும் எதிர்ப்பார்ப்பில் தள்ளியிருந்த அவர் 2018 பிறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வாசகர்களிடமிருந்தும் இருபத்து ஐந்து எழுத்துகளிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டார். அவரது இந்த திடீர் மரணத்தால் நாவலின் முக்கியப் பாத்திரமான மில்கோன் நிற்கதியாக நிற்கிறார்.
சூ க்ராப்டன் எழுதிய நாவல்கள் அத்தனையும் அமெரிக்காவில் நிகழ்ந்த அவ்வளவாக யாராலும் கண்டுக்கொள்ளப்படாத கொலை, கொள்ளைகளைப் பற்றிய மர்மக் கதைகளைக் கொண்டவை. ஒரு குடும்பம் கொலையில் ஒருவரை இழந்து தவித்தால் இக்கொலையை விசாரிக்க அமெரிக்க புலனாய்வுத் துறை வருவதைக் காட்டிலும் கின்சை மில்கோன் வர மாட்டாரா…என்று எதிர்ப்பார்க்கும் அளவிற்கு அப்பாத்திரம் எதிர்ப்பார்ப்பைக் கொடுத்திருந்தது.
சூ டைலர் க்ராப்டன் எழுதிய முதல் நாவல் KEZIAH DANE. இந்நாவல் 1967 ஆம் ஆண்டு வெளியானது . வாசகர் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடும்படியாக அந்நாவல் இருந்திருக்கவில்லை. அதைத்தொடர்ந்து LOLLY – MADONNA WAR, NURSE போன்ற நாவல்களை எழுதினார். இந்நாவல்கள் தொலைக்காட்சிகளில் படமாக்கப்பட்டன. இதிலிருந்து கிடைத்த சில ஏமாற்றங்களால் பத்திரிகைகளில் தொடர் எழுதவும் தொலைக்காட்சிகளுக்கு தன் நாவலைக் கொடுக்கவும் தவிர்த்தார். இம்முடிவிற்குப் பிறகு அவர் அகர வரிசையினலான நாவல்களை எழுதத் தொடங்கினார். அப்படியாக எழுதுகையில் முதல் நாவலையும் அதன் பின் எழுதப்போகும் நாவல்களையும் உயிரோட்டத்துடன் இணைக்கும்படியாக ஒரு கதாப்பாத்திரம் அவருக்குத் தேவைப்பட்டது. அக்கதாப்பாத்திரம்தான் ‘கின்சே மெல்கோன்.’
முதல் நாவலில் அவரது அறிமுகமே அதன் பின் வரப்போகும் அத்தனை நாவலின் எதிர்ப்பார்ப்பையும் கூட்டியது. முதல் நாவலில் அப்பாத்திரப் படைப்பின் மீது பெரிய அளவில் விமர்சனம் வந்தது. மில்கோனை ஏன் இப்படியாக அழகு தன்மை இல்லாமல் காட்ட வேண்டும். ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம். தடித்த உருவம். 118 பவுண்ட் எடை. திகைக்கும் படியான முகம், எந்நேரமும் கறுப்பு மேலாடை. களைந்த சிக்குண்ட கூந்தல்…. இப்படியான பாத்திரத்தை முதலில் வாசகர்கள் ஏற்க மறுத்தார்கள். ஆனால் அப்பாத்திரத்தின் நுண்ணறிவும், எதையும் துருவிப்பார்க்கும் துப்பறிவும் வாசகர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருந்தன.
முதல் நாவலின் தொடக்கத்தில் அவர் தன்னை இப்படியாக அறிமுகம் செய்துகொள்வார். ‘எனது பெயர் கின்சே மெல்கோன். தனியார்த்துறை துப்பறிவாளர். கலிபோர்னியாவைச் சேர்ந்தவள். வயது முப்பத்து இரண்டு. இரண்டு முறை விவாகரத்து பெற்றவள். எனக்கு குழந்தைகள் இல்லை. நேற்றைக்கு முந்தைய தினம் நான் ஒருவரை கொலை செய்துவிட்டேன். அவரைப் பற்றி நினைவு என் தலைக்குள் சுமையென அழுத்துகிறது…’ என்பதாக நீளும் அக்கதாப்பாத்திர அறிமுகம் வாசகர்களிடம் பல கேள்விகளுடன் கூடிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. அவர் திருமணம் செய்து கொண்ட கணவன் யார்.? ஏன் இரு முறை விவாகரத்து செய்துகொண்டார். ஏன் குழந்தைகள் இல்லை…இப்படியான எதிர்ப்பார்ப்பு கேள்விகளினூடே அவர் அடுத்தடுத்த நாவல்களில் முடிச்சை அவிழ்த்து வந்தார்.
இக்கதாப்பாத்திரம் மீதான உண்மையை ஆராய அமெரிக்கா வாசகர்கள் துப்பறிய
இறங்கினார்கள். கலிபோர்னா மாகாணத்தில் சென்டா தெரஸா என்கிற கிராமத்தில் அக்கதாப்பாத்திரம் பிறந்ததாகக் காட்டுவதும், அவரது பிறந்த நாளென மே 5, 1950 என நாள் குறித்ததும் அந்நாளில் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தவர்களின் குறிப்புகளை எடுத்து வைத்துகொண்டு இவர்களில் யார் கின்சே மில்கோன் எனத் தேடும்படலமும் நடந்தேறியது.
ஆண் வாசகர்கள் அப்பாத்திரப்படைப்பிற்குப் பெரியளவில் எதிர்ப்புக் காட்டினார்கள். காரணம், அப்பாத்திரப் படைப்பு மொத்த ஆண்களையும் பெண்களுக்கு எதிராக காட்டியது. ஆனால் நாவலின் போக்காலும் மெல்ல அவிழ்க்கப்படும் முடிச்சுகளாலும் அவரது நாவல்கள் ஆண் வாசகர் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்தன.
சூ க்ராப்டன் நாவல்களைப் படைத்தார் என்பதைக் காட்டிலும் பாத்திரங்களைப் படைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது இறுதி பயணத்தில் வாசகர்களோடு வாசகர்களாக துப்பறிவாளர் கின்சே மில்கோன் எனும் கற்பனையான கதாபாத்திரம் கலந்திருப்பார். அவர் இத்தனை ஆண்டுகால துப்பறிவுப் பணி நிறைவுறாமல் பாதியில் நிர்க்கதியாய் விட்டுச்செல்வதை வாசகர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஆங்கில அகர வரிசை எழுத்துகளில் ஒன்றை இழந்து நிற்கிறது. சூ டைலர் க்ராப்டன் எனும் எழுத்தாளரின் மரணத்தை இப்படியாகத்தான் குறிப்பிடத் தோன்றுகிறது.
![]()