உலகம்

போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ரஷ்யா, உக்ரைன் தீவிர முயற்சி

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு நாடுகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு கூட்டத்தில் பேசும்போது, போர்முனை முழுவதும் ரஷ்யப் படைகள் தற்போது “மூலோபாய முன்முயற்சியை” (Strategic Initiative) கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

உக்ரைனின் நேட்டோ (NATO) பயிற்சி பெற்ற படைகளையும், மேற்கத்திய நவீன ஆயுதங்களையும் ரஷ்ய இராணுவம் வெற்றிகரமாக அழித்து வருவதாகவும் (Grinding down), 2025ஆம் ஆண்டில் மட்டும் உக்ரைனின் 300 குடியிருப்புப் பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் உரிமை கோரியுள்ளார்.

உக்ரைன் தனது பிராந்தியக் கோரிக்கைகளை ஏற்கும் வரை இந்த இராணுவ நடவடிக்கை தொடரும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

மறுபுறம், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் குபியான்ஸ்க் (Kupiansk) பகுதிக்கு விஜயம் செய்து தனது படையினரை ஊக்கப்படுத்தினார்.

ரஷ்யாவின் பொருளாதாரத் தூணாக விளங்கும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்தி வரும் தாக்குதல்கள் ரஷ்யாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனின் நிலைப்பாட்டை வலுப்படுத்த போர்க்களத்தில் வெற்றிகளைப் பெறுவது அவசியம் என்றும், உக்ரைன் தனது தற்காப்பு அரண்களை வலுவாகப் பேணி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *