அரசியல் பத்தித்தொடர்… சொல்-44… சொல்லித்தான் ஆகவேண்டும்… தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ
அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை
பிரதேச வாதம் அல்ல – பகுதி 11
பக்கம்-03
1947 இல் நடைபெற்ற சோல்பரி அரசியலமைப்பின் கீழான இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1946 ல் மேற்கொள்ளப்பெற்ற தேர்தல் தொகுதிகள் எல்லைகள் மீள்நிர்ணயத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது. அப்போது தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியிலே அதாவது தற்போதைய அம்பாறை மாவட்டப் பகுதியிலே கல்முனை மற்றும் பொத்துவில் ஆகிய இரு தேர்தல் தொகுதிகள் அமைந்திருந்தன.
இவ்விரு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 1947, 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு மூன்று தேர்தல்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகளே தெரிவாகினர். ஏனெனில் இவ்விரு தொகுதிகளும் முஸ்லிம் பெரும்பான்மையாகவே விளங்கின. இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் தமக்கென ஒரு தமிழ்ப் பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள இயலாது இருந்தனர். அதனால் இப்பகுதித் தமிழர்கள் இத்தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் அரசியல்வாதிகளால் இழைக்கப்பட்ட தமிழருக்குப் பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக பலவிதமான சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுகளுக்குள்ளாகி இருந்தனர்.
மட்டுமல்லாமல் 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக நின்று வெற்றியீட்டிய முறையே எம் எஸ் காரியப்பர் மற்றும் எம் எம் முஸ்தபா ஆகிய இருவருமே வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கக் கட்சிக்கு மாறியுமிருந்தனர்.
இவ்வாறு இருக்கும் போதே 1959 ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம்
நடைபெற்றது. இதன்படி இப்பிரதேசத்தில் அம்பாறை எனும் சிங்களப் பெரும்பான்மைத் தொகுதியொன்று உருவான அதே வேளை புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகள் மூன்றும் முஸ்லிம் பெரும்பான்மையாக வருமாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது மட்டக்களப்பில் தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவரும் தெரிவு செய்யப்படக்கூடியவாறு புதிய மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது.
அதேபோல் முஸ்லிம் உறுப்பினரும் தமிழ் உறுப்பினரும் தெரிவு செய்யப்படக்கூடியவாறு திருகோணமலை மாவட்டத்தில் புதிய மூதூர் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது.
ஆனால், இதே வாய்ப்பு அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதித் தமிழர்களுக்கு அதாவது தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்போது தமிழரசுக் கட்சியானது இப்பிரதேசத் தமிழ் மக்களின் எதிர்கால நலன்களைக் கவனத்தில் கொள்ளாது இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டது.
இதனால் இப்பிரதேச தமிழர்கள் (அம்பாறை மாவட்டத் தமிழர்கள்) 1976 இல் நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது உருவான புதிய பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டதன் அடிப்படையில் 1977-இல் நடந்த தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகக் காலஞ்சென்ற ம. கனகரட்ணம் அவர்கள் தெரிவு செய்யப்படும் வரை சுமார் 30 ஆண்டுகள் (1947-1977) தங்களுக்கென ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் அரசியல் அனாதைகளாகவே வாழ்ந்தார்கள். அதனால் இம் மக்கள் சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுக்குள்ளாகினார்கள். இதற்குத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீதான பாராமுகமே காரணம்.
பக்கம்-04
1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைத்த பிரதமர் அமரர் டட்லி சேனநாயகா அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்து அக்கட்சியின் சார்பில் அமரர் மு. திருச்செல்வம் அவர்கள் ஸ்தலஸ்தான (உள்ளூராட்சி) அமைச்சராகவும் ஆனார்.
அப்போது விடய அமைச்சராகவிருந்த தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அமரர் மு. திருச்செல்வம் அவர்கள் நினைத்திருந்தால் அப்போதைய சூழ்நிலையில் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகத் கொண்டு முன்னைய கல்முனை பட்டின சபையை இரண்டாகப் பிரித்து (அதன் வடபகுதியை) கல்முனைத் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளுராட்சி அலகு ஒன்றினை கல்முனையில் அப்போதே உருவாக்கியிருக்க முடியும்.
கல்முனைத் தமிழர்கள் அத்தகைய கோரிக்கையை அவரிடம் விடுத்திருந்த போதிலும்கூட அவர் அதனைச் செய்யவில்லை. காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வதுதான் யாழ் மேலாதிக்கத் தமிழரசுக் கட்சிக்குத் தேவையாயிருந்தது. அதனை ஏற்படுத்திக் கொடுத்தால் அது அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியிலே தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படப்போகும் முஸ்லிம் வேட்பாளரின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால்தான் அதனைச் செய்யவில்லை.
தமிழரசுக் கட்சிக்குக் கிழக்குத் தமிழர்களின் அடிப்படை நலன்களை விடவும் தங்கள் கட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதுதான் முன்னுரிமையாகப்பட்டது. தமிழரசுக் கட்சியின் யாழ் மேலாதிக்க உயர்மட்டப் பாராளுமன்ற அரசியலுக்கு அதாவது முதலாளித்துவக் குணாம்சம் கொண்ட அக்கட்சியின் ‘உப்பரிகை’ அரசியலுக்கு இதுதான் தேவையாக இருந்தது. இன்றும் அதுதான் நிலைமை.
சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னரே தமிழரசுக்கட்சி தனது கட்சி சார்பான அமைச்சர் அமரர் மு.திருச்செல்வம் மூலம் இதனைச் செய்து கொடுத்திருந்திருந்தால் இன்று கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது மட்டுமல்ல அது எப்போதோ தானாகவே கிடைத்திருக்கும். கல்முனை நகரமும் தமிழர்களிடருந்து கைநழுவிப்போய் இருக்கவும் மாட்டாது. கல்முனைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் முழுக்க முழுக்கத் தமிழரசுக் கட்சியேதான்.
(தொடரும் ….)
![]()