முச்சந்தி

நுவரெலியாவில் 77 பேரை காவுவாங்கிய டித்வா புயல்; 73 பேர் மாயம்!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் இன்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *