மாவீரர் துயிலுமில்ல பணிகளை மேற்கொண்ட போது துப்பாக்கியால் தாக்கி மக்களை விரட்டியடித்த இராணுவத்தினர்

முல்லைத்தீவு மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மக்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கி விரட்டியடித்த சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது .
மணலாறு பகுதியில் உள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அங்கு சென்று துப்பரவுப் பணிகளைச் செய்துள்ளனர்.
அப்போது,மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தினை சுற்றிவளைத்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் தாக்கி இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வு துறையினரும்,துப்பரவுப் பணியில் ஈடுபட்ட மக்களை அடித்து விரட்டவே,அவர்களின் தாக்குதலிலிருந்து தப்பித்து வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து கூறும் போது,
இறந்த உறவுகளை நினைவு கூரலாம் என ஜனாதிபதி கூறியுள்ளார், ஆனால் அப்படி கூறிவிட்டு மறைமுகமாக இராணுவத்தினரையும் புலனாய்வுப் பிரிவினரையும், அனுப்பி தாக்குவதா?
அளம்பில் புலனாய்வு துறையினர் எம்மை வெருட்டி இடையூறு செய்கிறார்கள். மணலாறு துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் படுத்திருக்கிறார்கள். நான்கு நாட்களாக நாம் துயிலுமில்லத்தினை துப்பரவு செய்கிறோம்.
ஜனாதிபதி சொல்வது ஒன்று ஆனால் இங்கு இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் செய்வது வேறோன்று. இப்படி செய்வதென்றால் ஏன் இறந்தவர்களை எந்தத் தடையுமின்றி நினைவு கூரலாம் என கூறினீர்கள்? இதற்கு எமக்கு ஒரு தீர்வு வேண்டும் எனக் கூறினர்.
![]()