பீகார் தேர்தல் முடிவு எதைக் காட்டுகின்றது?… நியூசிலாந்து சிற்சபேசன்


பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவு இந்திய அரசியலிலே பரவலான கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
பீகார் மாநிலத்திலே சொல்லிக்கொள்ளக்கூடிய வளர்ச்சி கிடையாது. வேலைவாய்ப்புக்கள் குறைவு. அதனால் பீகாரி மக்கள் வேலைதேடி பிறமாநிலங்களுக்குச் செல்கின்றனர். அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. ஆனாலும்கூட, 2015ல் ஆரம்பமாகிய நிதிஷ்குமார் ஆட்சியில் மக்களுக்கு கோபமோ வெறுப்போ ஏற்படவில்லை.
அதனாலேயே, முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பிரதமர் மோடியின்
பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பீகார் மாநிலத் தேர்தலிலே பிரமாண்டமான வெற்றி கிடைத்திருக்கின்றது.
மறுவளத்தில், முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் ராகுல்காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றது.
இது சோஷல் மீடியாவின் யுகமாகும். சாமானியர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே “ஸ்மார்ட்போன்” ஆகிவிட்டது. அதனால் பெருவாரியான தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அதனால் சிந்திப்பது குறைந்திருக்கின்றது. உணர்ச்சிவசப்படுவது அதிகரித்திருக்கின்றது. அஃது வலதுசார் அரசியல் செயற்பாடுகளுக்கு வரப்பிரசாதமாகும். கூர்ந்து அவதானித்தால், பீகார் முதல் வாஷிங்டன் வரை அதனைத் தெளிவாகவே காணலாம்.
அத்தோடு, மோடி – நிதிஷ்குமார் கூட்டணி வாக்காளர்களைத் தெளிவாக அடையாளப்படுத்திக் கொண்டது. நல்லபடியாகவே கவனித்துக்கொண்டது.
பீகார் சாதியக் கட்டமைப்பில் இயங்குவதாகும். அதனால், சாதி அடிப்படையிலேயே தேர்தல் உத்தி வகுக்கப்படுவதாகும். ஆனால், சமூகத்தின் ஒரு பிரிவான பெண்களை இலக்குவைக்கும் யுக்தி பீகாருக்குப் புதியதாகும்.
பீகாரிலிருந்து, அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வேலைதேடி பிறமாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். அதனால், பெண்களே குடும்பங்களை நடாத்துகின்றனர். அந்தவகையிலே, பெண்களை இலக்குவைத்து நிதீஷ்குமார் – மோடி கூட்டணி தேர்தல் உத்தியை வகுத்துக்கொண்டது.
சுயதொழில் துவங்க உதவி என்ற கோதாவில் தேர்தலுக்கு முன்பு பத்தாயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கான திட்டம், பெண்களின் ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை படிப்புதவி வழங்கும் திட்டம், மதுவிலக்கு எனப் பெண்களை மையமாகக் கொண்டே அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாகச் சொல்வதானால், அதிகமான ஆண்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைதேடிப்போயுள்ள சூழலிலே “மதுவிலக்கு” ஒருவகையான சமூகப் பாதுகாப்பை பெண்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே, மொத்தமுள்ள 243 ஆசனங்களிலே, மோடி – நிதிஷ்குமார் கூட்டணி 202 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் பீகாரில் ஆட்சி அமைக்கின்றது.
2014ம் ஆண்டு முதல் மோடி தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சியே இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கின்றது. 2024ன் நடுப்பகுதியிலே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பீடமேறியது. ஆனாலும்கூட, முழுமையாகக் கொண்டாடக்கூடிய வெற்றி கிடைக்கவில்லை. 240 ஆசனங்களே கிடைத்தன. பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு போன்ற மாநிலச் சக்திகளின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க முடிந்தது. அதனால், பாரதீய ஜனதாவின் சரிவு ஆரம்பமாகிவிட்டது எனக் கருதப்பட்டது.

அதனை, பாரதீய ஜனதா பொய்யாக்கி வருகின்றது. அரசியல்களத்தில் கடுமையாக உழைக்கின்றது. தேர்தல் வியூகங்களைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்கின்றது. மாநிலக் கட்சிகளிடையே புகுந்து விளையாடுகின்றது. “பூத் லெவலில்” (வாக்குச்சாவடி) இறங்கி வேலை செய்கின்றது.
அதனால், ஹரியாணா, மகாராஷ்டிரா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலே கிடைத்த வெற்றியின் தொடர்ச்சியாக பீகாரிலேயும் வெற்றி பெற்றிருக்கின்றது.
வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தம்” குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன. ஆனால், பீகார் வாக்காளர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. பிரதமர் மோடியையே வெற்றியின் நாயகனாக்கியுள்ளனர்.
இது, நியாயமாக நடைபெற்ற தேர்தலா அல்லது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதுபோன்று, “தில்லாலங்கடி” தேர்தலா என்பதே கேள்வியாகும்.
எதுஎப்படியாகிலும், அசாம் – தமிழ்நாடு – கேரளா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகின்ற சூழலிலே, பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணியின் வீரியத்தையே பீகார் தேர்தல் முடிவு காட்டுகின்றது.
![]()