பலதும் பத்தும்

கருப்பு கேரட் உற்பத்தி

தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

கேரட்… இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும்.

இது அனைவரும் அறிந்ததே…!

ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது.

அதுபற்றி தெரியுமா…?

ஆம்…அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை.

புதுடெல்லியில் இருந்து விதைகள்

இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு அடுத்ததாக பிரதான சாகுபடியாக கேரட் உள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

இதற்கான விதைகள் புதுடெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.

அத்துடன் தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது. இந்த பணியில் பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இவை வடமாநிலங்களில் பல்வேறு உணவு வகைகள், கேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளது. சோப்பு தயாரிப்பில் இயற்கை வர்ணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button