துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்; புகைப்பட ஆர்வத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த சோகம்

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள டீரா என்ற பல அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது மிஷால் தனது உறவினர்களை சந்திப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாய் சென்றுள்ளார்.
புகைப்பட ஆர்வலரான முகமது மிஷால், அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கும் விமானங்களை புகைப்படம் எடுப்பதற்காக அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரது கால்கள் இரண்டு குழாய்களுக்கு இடையே சிக்கி தடுமாறியதில் சமநிலை இழந்து கீழே விழுந்து இருக்கலாம் என்று முகமது மிஷாலின் குடும்ப நண்பர் ஹனீஃபா கே.கே செய்தி ஊடகம் ஒன்றுக்கு வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த உடனடியாக முகமது மிஷால், ரஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()