முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியைத் தாக்கிய கணவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு; சம்பவத்தை வெளிநாட்டிலிருந்து சி.சி.ரி.வி.யில் பார்த்த மகன்

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று கிராமமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் வயதான தம்பதியரான வீரசிங்கம் (75வயது ) மற்றும் அவரது மனைவி வீ.அழகம்மா (73வயது) ஆகியோருக்கு இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் விழித்து, கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.
அதன் பின்னர் கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் சி.சி.ரி.வி. காணொலி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள் அந்த வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகள் மேற்கொண்டதனையடுத்து கணவனின் உடல் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()