பேசுவதற்கு முன்னரே நிபந்தனை விதிப்பதா?; பொருத்தமில்லை என்கிறார் சுரேஷ்

தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளை கூறியுள்ளனர். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லை.
ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைகளை விடுத்து அரசாங்கம் ஆளுநர் ஆட்சியை நடத்துவதனை நிறுத்த வேண்டும்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறது. இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.
மேலும் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சில நிபந்தனைகளை கூறியுள்ளனர். அவை என்ன நிபந்தனைகள் என இதுவரை தெரியாது. பேச்சுவார்த்தை ஊடாக இணைய முடியும். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லை.
அத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளை கோரியிருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம். கடந்த அரசாங்கள் அனைத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தன . இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்காத நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் அரசாங்கம் முதலில் பாதாள உலக குழுக்களை ஒழிக்க வேண்டும் என்றார்.
![]()