இந்தியா

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முதல் விவசாயிகளின் இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்கள் வரை 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது, கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கட்சி கடுமையாகக் கண்டித்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

திமுக அரசு “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டது” என்றும், “பெண்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றும் குற்றம் சாட்டிய TVK, முதலமைச்சர் “தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வாரா” என்றும் கேள்வி எழுப்பியது.

மற்றொரு தீர்மானத்தில், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த TVK, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான தலையீட்டைக் கோரியது.

கனமழைக்கு மத்தியில் டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு TVK திமுக அரசை கடுமையாக சாடியது.

அரசாங்கத்தின் “செயலற்ற தன்மை 20 லட்சம் தொன் இழப்புக்கு வழிவகுத்தது” என்று கட்சி குற்றம் சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரியது.

வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டிய மற்றொரு தீர்மானம், முழுமையடையாத மழைநீர் வடிகால்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியது. 

வெள்ளத்தைத் தடுக்க ரூ.4,000 கோடி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறும் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *