பாரிய எதிரணியை உருவாக்க நடவடிக்கை; நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் சக்தியை உருவாக்க நடவடிக்கை எடுக்கின்றோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக ஜனநாயக விரோத சர்வாதிகர ஆட்சியில் நாட்டை கொண்டு செல்வதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை தோற்கடிப்பதற்காக எமது கொள்கைகளை நம்பும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளின் சக்தியை அமைத்து வருகின்றோம்.
நல்லாட்சி காலத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் 34 பேரே இருந்தோம். அன்று எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா ஆகியோரும் ஜே.வி.பி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்துடனேயே இருந்தது. ஆனால் எதிர்க்கட்சியின் கடமையை நாங்கள் நிறைவேற்றினோம். மக்களின் பிரச்சினைகளுக்காக முன்நிற்பதற்கு பதவி நிலைகள் அவசியமற்றது. உண்மையான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள் இப்போது ஒன்றிணைகின்றன. தமது காலம் வரும் வரையில் காத்திருக்காமல் மக்கள்சார்பாக சக்திகளை கட்டியெழுப்பி வருகின்றோம் என்றார்
![]()