வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் 15 லட்சம் ரூபாவில் ஒப்பந்தக் கொலை!; கொலையாளி தெரிவிக்கும் தகவல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் பொலிசாரால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை, டுபாயிலிருந்து பெறப்பட்ட 1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் , கொலைக்கு முன்னர் அந்தப் பணம் கொலையாளிக்கு ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் விசாரணைகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன.
இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 7 பேர் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தக் கொலை தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.
இதற்காக, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணம் தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், குற்ற அறிக்கைகள் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேகச் நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவு பணிப்பாளர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதேவேளை துப்பாக்கிதாரி நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து நேற்று மாலை அழைத்துவரப்பட்டு கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமைகைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம நாவின்ன பகுதியிலுள்ள மக்களுடன், பொலிஸாரின் சிறப்பு குழுக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு பாராட்டு தெரிவித்துள்ளது.
![]()