கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணத்தை வழங்கிய விஜய்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடந்த தமிழக வெற்றிக்கழக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் இந்திய ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ள விஜய், அவர்களது வங்கிக்கணக்குக்கு 20 லட்சம் இந்திய ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேரில் சந்திப்பதற்கு சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அனுமதி கிடைத்ததும் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் விஜய் தெரிவித்திருப்பதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு வணக்கம். கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம்.
இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்றவாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம்.
அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம். இவ்வாறு விஜய் அதில் தெரிவித்துள்ளார்.
![]()