இலங்கை

இஷாராவின் அதிரடி வாக்குமூலம்; விரைவில் சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்?

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னை கைது செய்வார் என அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போது வெறுப்பு நிலைமை ஏற்பட்டது.

இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லா சஞ்சீவவைவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா நேற்று முன்தினம் இரவு நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செவ்வந்தி, கைது செய்யப்பட்ட பிறகு, பொலிஸ் அதிகாரிகள் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிலையில், வேறொரு நாட்டின் பிரஜையாக அவரது முகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி, தனது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாராகி வந்துள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இஷார செவ்வந்தியின் மறைவிடத்தை பொலிஸாரால் அடையாளம் காண முடிந்தது.அதன் பிறகு ரோஹன் ஒலுகல தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேகநபர்களை இன்று இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய மற்றையவர்கள் மற்றும் இஷாராவை பாதுகாப்பாக நாடுகடத்த உதவிய தமிழரான ஜே.கே.பாய்க்கும் கெஹல் பத்மே அதிகளவிலான பணம் செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செவ்வந்தி நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர் நீர்கொழும்பு பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

குறித்த அழைப்பில் இஷாரா செவ்வந்தி, இது தான் என்னுடைய கடைசி தொலைபேசி அழைப்பு எனவும் இனி தொலைபேசி அழைப்புக்களை கூட மேற்கொள்ள மாட்டேன் எனவும் கூறியதாக விசாரணைகளில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அந்த அழைப்புக்காக செவ்வந்தி பயன்படுத்திய சிம் அட்டையினையும் அவர் துண்டித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், குறித்த பொலிஸ் அதிகாரி தவிர்த்து மேலும் பல முக்கிய புள்ளிகள் இஷாரா செவ்வந்தியை நாடுகடத்திய விடயத்தில் தொடர்புற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே, செவ்வந்தி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் குறித்த முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *