அர்ஜூன மகேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கிய நீதிபதி யார்?

2017 ஆம் ஆண்டு அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார்? கோட்டை நீதிமன்ற நீதிபதியாக அப்போது பதவி வகித்தது யார்? என்பதையும், தனது இரண்டாவது மனைவி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனிடம் எந்த பதவியில் இருந்தார் என்பதையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் 2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை இடைநிறுத்தியுள்ளதாக ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களிடம் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலத்தை இடைநிறுத்துவதானால் ஏன் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து விவாதித்து, காலத்தையும், அரச நிதியையும் வீணடித்தீர்கள். இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் போது மொனராகலை பகுதியில் மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்., மாணவர்கள் கசிப்பு அருந்தியுள்ளார்கள், பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்துள்ளார்கள். அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மகன் பதுளை மகா வித்தியாலயத்தில் வைத்து சிகரெட் பிடித்து , ஆசிரியர்களிடம் பிடிப்பட்டுள்ளார்.பிரதி அமைச்சரின் மகள் ஒருவர் தன்னை மாணவத் தலைவியாக தெரிவு செய்யவில்லை என்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.இதுதான் இன்றைய நிலை, உங்களது பிள்ளைகளை முதலில் திருத்திக் கொள்ளுங்கள் பின்னர் சட்டம் கொண்டு வரலாம்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க பற்றி தற்போது பல விடயங்கள் பேசப்படுகின்றன . இலங்கையில் பாரியதொரு மோசடியாக பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு மத்திய வணங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கியது யார்?, கோட்டை நீதிமன்ற நீதிபதியாக அப்போது பதவி வகித்தது யார்/ என்பதை ரங்க திஸாநாயக்க குறிப்பிட வேண்டும்.
ரங்க திஸாநாயக்கவின் முதலாவது மனைவி மத்திய வங்கியில் சேவையாற்றினார், இரண்டாவது மனைவியும் மத்திய வங்கியில் சேவையாற்றினார்.இரண்டாம் மனைவி , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனிடம் எந்த பதவியில் இருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.நாட்டு மக்கள் இதனை தெரிந்துக் கொள்ள வேண்டும்.தூய்மையானவர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் முதலில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
இந்த விடயத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன். எனக்கு எதிராக உள்ள மூன்று வழக்குகளுக்கும் அவர் நிச்சயம் வெகுவிரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வார் என்பதை இங்கு பதிவு செய்கின்றேன் என்றார்.
![]()