ஆட்சிக்கு வருவதற்கு முன் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

“தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். 1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. ஜனாதிபதியின் ஒரு வருட ஆட்சியில் நாட்டின் தேசிய விவசாயம் மற்றும் தேசிய உற்பத்தித் துறை வீழ்ச்சியடைந்துள்ளது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,”ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இனியும் கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிக்க முடியாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினீர்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?, மக்கள் பயனடைந்துள்ளார்களா?
ஜனாதிபதியின் ஒரு வருட ஆட்சியில் நாட்டின் விவசாயம், கடற்றொழில் ஆகிய துறைகளின் வளர்ச்சி பின்னடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்கு உணவளிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுகின்றார்கள். கடந்த அரசாங்கம் இயற்றிய மின்சார சபை சட்டத்தை இரத்துச் செய்வதாக மின்சார சேவையாளர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்கள். அவர்களும் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் இன்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே செயற்படுத்த முனைகின்றீர்கள்.
தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். 1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. காலம் மாறிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்க்கட்சிகள் மாற வேண்டும் என்று குறிப்பிடுவதற்கு முன்னர் அரசாங்கம் மாற வேண்டும் .
அழகான நாடு, செழிப்பான வாழ்க்கை என்று குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த ஒரு வருட காலத்தில் மக்கள் செழிப்பாகவில்லை. ஆனால் 159 உறுப்பினர்கள் மாத்திரம் செழிப்பாக உள்ளார்கள். ஆண்டு காலத்தை சாபம் என்று விமர்சித்தவர்கள் 75 ஆண்டு காலத்தில் செல்வந்தர்களாகியுள்ளமை கேள்விக்குறியாகியுள்ளது” என்றார்.
![]()