அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் – 05 … சோலையூர் குருபரன்

வலி சுமந்த மேனியர்….
“என்ன மகள் நானும் பாக்கிறன் மூண்டு நாளாக உண்ட மொகமே செஞசளிப்பு இல்லாம இருக்கு. சொகம் கிகம் இல்லையோ? தம்பியக் சட்டித்து ஆசுப்பிரிக்குப் போயித்து வாவன்” “ஒண்டுமில்ல மாமி சும்மாதான்” என்றாள் கங்கா.
கங்காவுக்குச் சில நாட்களாக ஏதொ இனம்புரியாத பயம் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இரவில் அடிக்கடி காணும் கனவுகளும் பீதியை ஏற்படுத்தின. இருந்தும் அதனை வெளிக்காட்டாது கணவன், மாமா, மாமியின் அன்பு, அரவணைப்பில் எல்லாம் மறந்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
காலம் எப்போதும் நமக்குச் சாதகமாக இருப்பதில்லை. அது நம்மைக் கடந்து செல்லும்போது பல அனுபங்களையும் படிப்பினைகளையும் விட்டுச் செல்லும். அவற்றைப் புரிந்து கொண்டு வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் சவால்களை வெற்றி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிரச்சினைகள், சவால்கள், எதிர்ப்புக்களைக் கண்டு சோர்ந்து நின்றால் எதனையும் சாதித்துவிட முடியாது. எக்காரியத்தையும் திட்டமிட்டுச் செயற்படுத்தும் போதுதான் வெற்றிகளும் சாதனைகளும் நமதாகின்றன.
எழிலன் ஆற்றல்மிக்க தச்சுத் தொழிலாளி. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். கௌரவம் பார்க்காமல் எத்தொழிலையும் செய்யக்கூடியவன். எந்தத் தீய பழக்கமும் இல்லாதவன். தனக்குச் சரியெனப்பட்டதைத் தயங்காது செய்து முடிப்பவன்.
கங்கா பக்கத்துக் கிராமத்து நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். கட்டுமஸ்தான உடல்வாகும் எடுப்பான தோற்றமும் கொண்டவள். சுமாரான அழகிதான். அவ்வூருக்குப் பாடசாலைக் கட்டிட வேலைக்காக வந்த எழிலனைக் கண்டு அவனில் காதல் கொண்டுடுவிட்டாள். ஆரம்பத்தில் ஒருதலைக் காதல்தான். காலம் கனிய இருவரும் காதலர்களாகிவிட்டனர். இருவரும் உயர்தரம்வரை கற்றவர்கள். எழிலனின் நேர்மையும், பணிவும் கங்காவைக் கவர்ந்ததனால் பெற்றோரின் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கங்கா எழிலனுடன் வந்துவிட்டாள். எழிலனின் தாய் தங்கம்மா கட்டி அணைத்து உச்சி மோர்ந்து “எண்ட தங்கமே நீ ஒண்டுக்கும் கவலப்பட வேணாம். எங்கட புள்ள மாதிரி ஒன்னயப் பாத்துக்குவம். அத இதப் பத்திக் கவலப்படுறத்த விட்டுத்துச் சந்தோசமாக ஒண்ட வீடு மாதிரி இங்க இரு. எண்ட மகன் உன்னய ராணி மாதிரிப் பாத்துக்குவான்” என்று கூறினாள். நல்ல நாள் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
கங்கா எழிலனின் குடும்பத்தில் பெண் பிள்ளை இல்லாக் குறையை நிவர்த்தி செய்தாள். சந்தோசம், மகிச்சியுடன் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருந்தது. கங்கா நான்கு மாதக் கர்ப்பிணி. மாமன், மாமி இருவரும் கங்காவுக்குப் பெற்றோரின் உறவு இல்லாத குறையைத் தீர்த்து வைத்தனர். பாசத்தைக் கொட்டி அரவணைத்தனர். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்த கவலை இல்லாமல் ஏழு மாதங்களைக் கடத்தி இருந்தாள். எழிலனின் பெற்றோரை அம்மா அப்பா என்றே அழைப்பாள்.
அன்று ஒரு புதன் கிழமை காலை விழித்து எழுந்ததிலிருந்து பதட்டத்துடன் காணப்பட்டாள் கங்கா. மனதில் சோகமும் பயமும் தோன்றி நிலை குலையச் செய்திருந்தன. இருந்துதம் அன்று செய்ய வேண்டிய வேலைகளை நேரகாலத்தோடு செய்து முடித்திருந்தாள். அன்று அவளுக்கு வைத்தியசாலையில் கிளினிக் நாள். “அம்மா நாங்க கிளினிக்குக்குப் போயித்து வாறம். நீங்க ஒண்டும் சமைக்க வேணாம். நாங்க வேளைக்கு வந்து சமைக்கிறம். அப்பா தோட்டத்துக்க வேல செய்றாரு. அவருக்கு உதவி ஒத்தாசி செய்யுங்கோ” எனக் கூறிக் கொண்டு எழிலனும் கங்காவும் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். பரிசோதனைகள் முடிந்ததும் இருவருமாகச் சந்தைக்குச் சென்று தட்டுமுட்டுச் சாமான்களை வாங்கிக்கொண்டு மோட்டார் பைக்கில் வீடு நோக்கிப் புறப்பட்டனர்.
எழிலனின் தாய் தங்கம்மா ஓலையால் வரிந்து கட்டப்பட்ட குசினிக்குள் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். கங்கா வீட்டில் இருந்தால் றைஸ் குக்கரிலும், காஸ் அடுப்பிலுமே சமைப்பாள். தங்கம்மா விறகடுப்பில் சமைத்துப் பழக்கப்பட்டவள். அதில் சமைப்பதற்குச் சிறு பயமும்கூட இருந்தது. விறகடுப்பில் சோறு சமைத்து முடிந்ததும் கறிச் சட்டிகளை அடுப்பில் ஏற்றத் தயாராக இருந்தன. அடுப்பில் இருந்த சோற்றுப் பானையை இறக்கி வைப்பதற்காக எழும்பியவள் கால் இடறி சோற்றுப் பானையின் மேல் விழுந்தாள். அவ்வேளையில் போத்தல் வாய் மூடாது அடுப்புக்கருகில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் போத்தல் அடுப்புப் பக்கம் சாயந்து விழ தீ வேகமாகப் பற்றி எழுந்து, தங்கம்மாவின் சேலையில் பிடித்த தீ விரைவாகக் குடிசையிலும் பற்றிக் கொண்டது.

“ஓடியாங்கோ! என்னயக் காப்பாத்துங்க காப்பாத்துங்க” எனஃற தங்தம்மாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுத் தோட்டத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த அவள் கணவன் சின்னவன் ஓடி வந்தான். குடிசை எரிவதைக் கண்ட அயலவர்களும் ஓடி வந்தனர். அதற்கிடையில் சின்னவன் தங்கத்தைக் காப்பாற்றக் குசினிக்குள் பாய்ந்துவிட்டான். தங்கத்தைத் தூக்கி வெளியேவர எத்தனிக்கையில் கூரை எரிந்து அவர்கள்மீது விழுந்தது. இருவரும் கீழே விழுந்துவிட்டனர். அயலவர்கள் முடிந்தவரைத் தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்து இருவரையும் வெளியே எடுத்து வாழை இலையினாலும் ஈரச் சாக்கினாலும் சுற்றி வைத்தியசாலைக்குக் அகாண்டு செல்லத் தயாராகும்போது எழிலனும் கங்காவும் வரும் வழியில் தகவலறிந்து வேகமாக வந்து கொண்டிருந்தனர். பைக்கில் இருந்து இறங்கி ஓடி வரும்போது மயக்கமுற்று கங்கா கீழே விழுந்துவிட்டாள். மூவரையும் டிமோ வட்டா எண்டியில் ஏற்றிக் கொண்டு வேகமாக வைத்தியசாலைக்குச் சென்றனர்.
மாமரக் கிளையில் அமர்ந்திருந்த அண்டங்காக்கை முழுவதைளும் பார்த்துக் கண் கலங்கிச் சோகத்துடன் பறந்து சென்றது.
கங்காவுக்குக் குருதிப் பெருக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. சின்னவனையும் தங்கத்தையும்
பரிசோதித்த வைத்தியர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர் எனக் கூறினார்.
கங்காவைப் பரிசோதித்த வைத்தியர் ‘நிலத்தில் விழுந்தபோது அடி வயிறு தாக்குப்பட்டு கர்ப்பம் கலைந்து, கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியதோடு கங்கா மூன்று தினங்கள் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும்’ எனவும் கூறினார். எழிலன் சித்தப் பிரமை பிடித்தவன் போலாகிவிட்டான்.
வைத்தியசாலையில் பொலிஸ் விசாரணைகள் ஏனைய செயற்பாடுகள் யாவும் முடிந்து மறுநான் இருவரின் சடலங்களையும் எடுத்து வந்தனர். சகல கிரியைகளும் முடிந்து சடலங்களை அடக்கம் செய்யப்பட்டன.
மூன்றாவது நாள் கங்கா வைத்தியசாலையில் இருந்து நிலை குலைந்த நிலையில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். தாய்க்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தையாகவும் தன்னைப் பாதுகாத்த இருவரும் இறந்ததோடு கர்ப்பம் கலைந்ததையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தினமும் அழுது கொண்டெ இருந்தாள். கங்காவின் சோகமும் அழுகையும் அண்டங்காக்கையையும் பாதிதத்தது. அங்கிருந்து கவலையோடு பறந்து சென்று நாவல் மரக் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தது.
உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஊர்க்குருவி அண்டங்காக்கை சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு தாழப் பறந்த வந்து அதனருகில் அமர்ந்து கொண்டது. “வா தம்பி பக்கத்தில குந்திக் கொள்ளு” என்றது அண்டங்காக்கை. “அக்கா பெரிய சோகம் ஒன்றுடன் காத்திருக்கிறயள் போலத் தெரியுது. என்னெண்டு சொல்லுங்கோவன்” என்றது ஊர்க்குருவி.
“தம்பி உனக்கு கங்கா அக்காவத் தெரியுந்தானே” “ஓம் தெரியும். எழிலன் அண்ணையோட வீட்டுக்கார அக்காதானே” “ஓம் அந்த அக்கா வந்ததில் இருந்து மாமன், மாமி ரெண்டு பேரும் ஒரு குறையும் இல்லாமத்தான் வைத்திருந்தாங்க. கங்கா அக்காவும் இருவரையும் அம்மா, அப்பா என்றுதான் அழைப்பா. அந்த அன்பிலயும் பாசத்திலயும் இடி விழுந்தது போல் அற்பாயுசுல இருவரையும் எசமன் கொண்டு போயித்தான். போதாதென்று கங்கா அக்காட கருவில வளர்ந்த சிசுவுட உசிரையும் பறிச்சித்தான். ஈவிரக்கம் இல்லாதவன் எண்டு சனங்க பேசிக்கிறாங்க. மூண்டு உசிரப் பறிகொடுத்த இழப்ப அந்தக்கா எப்படித்தான் தாங்கப் போகுதோ?. ஈவிரக்கம் இல்லாத பாக்கியம் எண்டொருத்தி ‘இவள்ற ராசிதான் மூண்டு உசிரப் பறச்சுப் போட்டுது. இந்தக் குடும்பத்தில என்னெல்லாம் நடக்கப் போகுதொ. இனி அவள்ற வயித்தில புளுப்பூச்சி ஒண்டும் தங்காதாமே எண்டும் கதை அடிபடுது’ என்கிறா. எங்க, எவடத்தில. என்ன கதைக்கணும் எண்டு தெரியாம நரம்பில்லாத நாக்கால என்னெல்லாம் கதைக்குகுதுகள். அவவ சபிச்சுப் போட்டுத்தான் பறந்து வந்தநான்” என அழுது கூறியது.

“இதெல்லாம் இப்ப சகசமக்கா. பலதுகள் எங்க எவடத்த எண்டு காத்தக் கிடக்குதுகள். இடம் வாய்த்தால் இன சனத்தையும் மறந்து, பாவ புண்ணியம் பாக்காம வாயக்கு வந்தபடி என்ன எழவெல்லாம் கதைச்சுப் போட்டுப் போகுதுகள். இதுகளால பலர் உத்தரிக்குதுகள். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ உன்பது போல இதுகளும் உத்தரிக்கத்தான் போகுதுகள். நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
அதுக்கிடையில் பல குடும்பங்களத் துன்பப்படுத்திப் போடுங்கள். யாரும் யாரையும் நம்ப முடியாம இருக்கு. பாவம் அந்த அக்கா தாய், தகப்பனையும் பிரிஞ்சு வந்து கவல வராம பாசங் காட்டிய மாமன் மாமியையும் இழந்து, கருவில் வளந்த உசிரையும் பறி கொடுத்து நிக்குது. இதுதான் அக்கா கூறுவாங்க ‘எதுவும் நிரந்தரம் இல்லையெண்டு’ எல்லாம் மாறிப் போகும். இதுவும் கடந்து போகும். நம்மளால கவலப்பட மாத்திரந்தான் முடியும். கொஞ்ச நாளைக்கு சோகம், கவலை இருக்கும். பிறகு பழக்கப்பட்டுக் கடந்து போகும். அக்கா எனக்கு நேரமாகுது. நானும் போக வேணும்” என ஊர்க்குருவி கூறி இரு சிறகுகளையும் சொண்டினால் நீவிவிட்டுப் பறந்த சென்றது.
ஊர்க்குருவியொடு உரையாடி மனப் பாரத்தை இறக்கி வைத்த சந்தோசத்தில் தன்
சொண்டினால் இறகுகளை நீவிவிட்டுத் தானும் பறந்து கூட்டுக்குச் சென்றது. ஊர்க்குருவி உயரப் பறந்து வான்வெளியில் கலந்துவிட்டது.
தடுக்கி விழுந்து வயிற்றில் அடிபட்டதில் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டதனால் இப்போதைக்குக் கரு உருவாவதற்கான வாய்ப்பில்லை. மருந்து, மாத்திரை எடுத்துக் கட்டுபாட்டோடு இருந்தால் காலப்போக்கில் சரிவரலாம்’ என வைத்தியர் கூறிவிட்டார். கங்காவின் பெற்றோர் அடிக்கடி வந்து ஆறுதல் கூறி இருவரையும் தங்களோடு வந்திருக்குமாறு கூறிச் செல்கின்றனர். வலிகளையும் இழப்பையும் சோகத்தையும் மறப்பதற்குச் சிறிது காலம் அவர்களோடு செர்ந்து வாழ்வதுதான் இருவரக்கும் சரியெனப்பட்டது….
களம் தொடரும்…..
![]()