இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 21 … சங்கர சுப்பிரமணியன்


இன்னும் சிலர் பெற்றோருக்கு வயது முதிர்ந்த காலத்தில் சரியாக உணவு கொடுத்து பராமரிப்பதில்லை. நான் பெங்களூரில் இருந்தபோது பெற்றோரை நன்றாக கவனித்துப் பார்ப்பவர்களையும் பார்த்துள்ளேன். பெற்றோரை வயதான காலத்தில் காப்பாற்றாதவர்களையும் பார்த்திருக்கிறேன்.
பெற்றோர்களை நன்றாக பார்க்காதவர்கள் வீட்டில் தடபுடலாக படையலுடன் பூஜை செய்தவர்களையும் பார்த்துள்ளேன். இப்படி படைக்கும்போது வைக்கப்படும் நான்கு வாழப்பழங்களில் இரண்டை கடவுள் சாப்பிட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?
கடவுள் வாழைப்பழம் சாப்பிடுகிறார் என்பதை விளம்பரபடுத்தி பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பதுபோல் செய்தியைப் பரப்பி ஒரு புது வியாபாரத்தை தொடங்குவார்கள். வியாபாரம் சரியாக வராவிட்டால் கடவுளுக்கு வாழைப்பழம் வைத்து வழிபடுகதையே நிறுத்தி விடுவார்கள்.
பெற்றோருக்கே உணவளித்து காப்பாற்றாதவர்கள் கடவுள் தினமும் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டால் விடுவார்களா? அப்புறம் வாழைப்பழத்தை
கடவுள் கண்ணிலேயே காட்டமாட்டார்கள்.
வள்ளுவராவது “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” என்றுதான் சொன்னார். ஆனால் கடவுள் வாழைப்பழத்தை சாப்பிட்டாலோ
பூஜையையே நிறுத்தி விடுவார்கள்.

இந்த உண்மைகள சொன்னால் நமக்கு கிடைக்கும் பட்டம் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்பதே. இன்னும் சிலர் நாம் சாமிகளுக்கே இத்தனை விளக்கும் சொல்லும்போது சாமியை விட்டு ஆசாமிகளுக்கு அடிமையாகி சாமியார்களின் பக்தர்களாகி விடுகிறார்கள். எது எப்படியோ என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதை மட்டும் நன்றாக உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள்.
நான் இவற்றையெல்லாம் வீட்டிலுள்ளோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் சொல்லும்போது நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் என்று ஆமோதிப்பதுபோல் தலையாட்டி விட்டு அப்புறம் சீதைக்கு ராமன் சித்தப்பன் என்பார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்ததும் கடவுள்
எவரையும் எதையும் செய்ய தூண்டவில்லை
என்பது விளங்குகிறது. அதற்காக நான் குறைகூறுவதாக எண்ணாதீர்கள். அது அதற்கென்று தனி இடங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் எல்லாவற்றையும் செய்யக்கூடாது என்ற என் எண்ணத்தை பகிர்கின்றேன்.
பச்சோந்திகள் போல் இடத்திற்கு தக்கபடி தோற்றத்தை மாற்றிவிடுவார்கள். உங்களுக்கு சான்றுடன் விளக்குகிறேன். பத்து பவுனுக்கு தங்க நகை செய்ய வேண்டும். நகைக் கடைக்காரரின் தோற்றம் எப்படி இருக்கும்? இன்னும் எளிதாக சொல்கிறேன் தங்கநகை செய்யும் ஆச்சாரியிடம் போகிறீர்கள்.
அவர் வெட்டறுவாள் மீசையுடன் இடுப்பில் ஒரு லுங்கியும் லுங்கியின்மேல் இடுப்பில் இரண்டரை அங்குல பெல்ட்டும் அணிந்து மார்பில் புலிப்பல் சங்கிலியோடு இருந்தால் அவரை நம்பி பத்து பவுன் நகை செய்ய பணம் கொடுப்பீர்களா? அத்தோடு அவர்முகத்தில் வெட்டுக்காயம் இருந்தால் அந்த இடத்தை விட்டு ஓடிவிட மாட்டீர்களா?
இன்னொரு சான்றும் சொல்கிறேன். கண்ணை மூடிக்கொண்டு நம் ஊருக்கு போய்விட்டதாக கற்பனை செய்யுங்கள். நீங்கள் ஆடு வெட்டும் கசாப்புக் கடையின் முன் நிற்கிறீர்கள். அக்கடைக்காரரின் தோற்றம் எப்படி இருக்கும்? நான் சொல்லமாட்டேன் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.
ஆனால் கண்டிப்பாக அவர் மழுமழுவென்று முகத்தை சவரம் செய்து மீசை இல்லாமல் நெற்றியில் சந்தணம் குங்குமத்துடன் வெள்ளை வேட்டி ஜிப்பாவுடன் இருக்கமாட்டார். சரி, தடங்கலுக்கு வருந்துகிறேன் கட்டுரைக்குள் செல்வோம். வழி தவறிச் சென்றுவிடாமல் எப்படியும் உங்களை கட்டுரைக்கு கூட்டிச்செல்வது என் பொருப்பு.
கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் நானும் கோவிலுக்கு செல்கிறேன். நான் கோவிலுக்கு போகும் காரணம் வேறு. நம் இல்லங்களில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்களின் படங்களை வைத்து நினைவு கூர்ந்து வணங்குகிறோம். உயிருடன் இருக்கும் பெரியோர்களை வணங்குகிறோம்.
அப்படி வணங்கினால் நமக்கு சொர்க்கம் கிடைக்கும் அல்லது வேலைவெட்டி இன்றி சும்மா இருந்தால் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நினத்தா வணங்குகிறோம்.

அதே போல் பல யுகங்களுக்கு முன்போ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ
தோன்றி வாழ்ந்நு மறைந்தவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிலர் வணங்குகிறார்கள். அல்லது புராணக்கதை என்றாலும் நம் முன்னோர்கள் நம்பி வணங்கிய பழக்கத்தை கண்மூடி பின்பற்றுகிறார்கள்.
யார் என்ன நினைத்து வேண்டுமானாலும் வணங்கட்டும். நான் நமக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது உண்மையோ புராணக்கதையோ எது எப்படி இருந்தாலும்
ஒரு வணக்கத்தை போட்டு வைப்பதில் என்ன குறைந்து விடப்போகிறோம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆலயங்களுக்கு வரும் வெள்ளையர்கள் சொர்க்கம் கிடைக்கும் அல்லது வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்றா வருகிறார்கள்?
மற்றபடி இயற்கை என்னும் பேராற்றல் தான் இறை. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பூதங்களை உள்ளடக்கிய பேராற்றலே இறை. இதையே வள்ளுவனும் விசம்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது என்றும் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காப் பெறின் என்றும் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு என்றும் இயற்கையின் முதன்மையை கூறியிருக்கிறார்.
இப்போது என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்துக்கு காரணத்தை சொல்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு
வந்தவுடன் இங்குள்ள வழிபடுமிடங்களைப் பார்த்தேன். பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே தென்பட்டார்கள். சிறுவர்களையோ வாலிபவயது உடையவர்களையே அங்கே அதிகமாக பார்க்க முடிவதில்லை. ஒரு ஊருக்கு ஒரு தேவாலயத்துக்கு மேல் இல்லை.
(தொடரும்…)
![]()