ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடும், சீனாவின் இராணுவ அணிவகுப்பும்

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொண்டார். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் சீனாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த மாநாட்டின் போது, பிரதமர் மோடி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொண்டார்.
இதற்கிடையில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் இந்தியக் குழுவினர் பங்கேற்கவில்லை. ஜப்பானுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜப்பானின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை என்பதனால் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை SCO உச்சி மாநாடு குறித்து அமெரிக்கா மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் கலந்துகொண்டது, அமெரிக்காவிற்கு எதிரான ஒரு கூட்டுச் சதி என அவர் குற்றம் சாட்டினார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கை சீனத் தலைவர் ஷி ஜின்பிங் குறிப்பிடத் தவறியதற்கும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
மாநாட்டில் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருடன் கலந்துகொண்டது அமெரிக்காவில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகளால் இந்தியா சீனாவுடன் நெருக்கமான உறவை நாடுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தகக் கொள்கைகள், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்புகள், புவிசார் அரசியலில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ன தெரிவிக்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கைகள், இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாகச் செல்லத் தூண்டக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, அமெரிக்காவின் ஆதிக்கத்தை பலவீனப்படுத்தும் அதே வேளையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் ரஷ்யாவும் தங்கள் செல்வாக்கை மேலும் அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இரு தரப்புக்கும் இடையிலான இந்த பதற்றம், இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்காவுடனான தங்களின் பொருளாதார உறவுகளையும், சீனா மற்றும் ரஷ்யாவுடன் புவிசார் அரசியல் நலன்களையும் சமநிலைப்படுத்த வேண்டிய நிலைக்கு கொண்டு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




![]()