ஸ்பெயினின் தக்காளி திருவிழா களைகட்டியது!

ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தக்காளி திருவிழாவான லா டொமேடினா, ஸ்பெயினின் புனோல் நகரில் இந்த ஆண்டிற்கான கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது. வழக்கம்போல், ஆகஸ்டு மாதத்தின் கடைசி நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஒருவருக்கொருவர் டன் கணக்கிலான தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர்.
வாலன்சியா நகருக்கு மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய நகரமான புனோலில், நடைபெற்ற இந்த விழாவில் உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலுமிருந்து – குறிப்பாக கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தாலும், உள்ளூர் மக்களுக்கு அது இலவசம்.
காலை நேரத்தில் வானவேடிக்கையுடன் தொடங்கிய இந்த விழாவிற்காக, சுமார் 120 டன் எடை கொண்ட, பழுத்த, மென்மையான தக்காளிகள் பயன்படுத்தப்பட்டன. இவை உண்பதற்கு ஏற்றதல்ல என்றும், பிரத்யேகமாக திருவிழாவிற்காகவே வளர்க்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. பங்கேற்பாளர்கள் பல மணி நேரம் இந்த ‘தக்காளிப் போரில்’ ஈடுபட்டு, வேடிக்கையாக ஒருவரையொருவர் தக்காளியால் அடித்து விளையாடினர்.
பலத்த ஆரவாரத்துடனும், சிரிப்புடனும் காணப்பட்ட இந்த நிகழ்வில், பலர் தக்காளியை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.
இறுதியாக, இந்த கொண்டாட்டம் முடிவடைந்ததும், நகரின் தெருக்களில் பரவியிருந்த தக்காளி கழிவுகளை சுத்தம் செய்ய சிறப்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டு, மிக விரைவாக நகரமே தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த தனித்துவமான கொண்டாட்டம், புனோல் நகரத்திற்கு உலகளவில் பெரும் புகழையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

![]()