கதைகள்

மிகைப்படுத்தும் மேதாவிகள்!…. கதை… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

நம்மில் சிலரைப் பார்த்திருப்போம் சாதாரணமாக பேசும்போது கூட மிகைப் படுத்தி பேசுவார்கள். எதுவானதாக இருக்கட்டும் அதில் முதன்மையாக இருப்பவர்போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அதில் துளிகூட உண்மை இருக்காது. இவர்களது தற்பெருமையை தாங்கவே இயலாது. இப்படிப்பட்டவர்கள் நமக்கு நண்பர்களாக வாய்த்துவிட்டால் நம் கதி அதோகதிதான்.

ஆரம்பத்தில் இவர்களது தற்பெருமைகளை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் போகப்போக கேட்டு கேட்டு புளித்துவிடும். ஒருவர் பெருமைக்கு உரியவராக இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்த பெருமை பிறர் நம்மைப் பற்றிக் கூறுவதாக இருக்க வேண்டும். தான் இறைச்சியுண்டது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக எழும்பை மாலையாக அணிந்து சுற்றுவதுபோல் இருக்கக்கூடாது.

நண்பர்கள் ரகுவும் விமலும் ஒருநாள் மாலை மீனாட்சி அம்மனிடம் இத்தகையவர்களை மாற்றும்படி முறையிட்டார்கள். முறையிட்ட கையோடு தெற்குவெளி வீதியில் உள்ள அந்த பிரபலமான உணவகத்தில் நுழைந்தார்கள். அப்போது திரும்பவும் தற்பெருமை பற்றிய பேச்சு தொடரவே,

“அது அப்படித்தான். அவர்களைப்பற்றி குறைகூறவும் முடியாது”என்றான் ரகு.

“என்னடா இது. இப்பத்தான் அம்மனிடம் முறையிட்டோம் அதற்குள் அந்தர் பல்டி அடிக்கிறாயே”

“இல்லடா, பாவம் அவர்கள். அவர்களை யாரும் பாராட்டாததால் தம்மைத்தாமே பாராட்டி ஆறுதல் அடைவார்கள்”

“அதற்கு என்ன செய்வது? நாம் பிறரை பாராட்டினால்தானே மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவார்கள்” என்றான் விமல்.

இந்த பேச்சை இத்தோடு விடுவோம். நான் இப்போது இரண்டு மேதாவிகளைப் பற்றி சொல்கிறேன் கேள் என்ற ரகு கதையைத் தொடங்கினான். மிகவும் பிரபலமான புள்ளி விபர நிபுணர்கள் வாஷிங்டனில் இருந்து சிட்னியில் நடைபேறும் கலந்தாய்வு கூட்டமொன்றில் கலந்துகொள்ள விமானத்தில் பயணித்தனர்.

கடலின் மேல் பறந்துகொண்டிருந்த விமானம் எட்டுமணி நேரத்தைக் கடந்தபோது ஒரு அசம்பாவிதம் நடந்தது. பெருத்த இடிமலையில் சிக்கி விமானம் தள்ளாடியது. சிறுது நேரத்தில் பலத்த மின்னல் தாக்க இயந்திரம் ஒன்று பழுதாகி செயலிழந்தது. அவர்கள் பயணித்த விமானம் நான்கு இயந்திரங்களக் கொண்ட போயிங் 747 விமானம்.

இயந்திரம் செயலிழந்த சிறிது நேரந்தில் தலைமை விமானியிடம் இருந்து,

“லேடீஸ் அன்ட் ஜெண்டில்மென், இடியடன் கூடிய பெருமழையால் ஏற்பட்ட தள்ளாட்டத்துக்கு வருந்துகிறேன். இன்னனொரு விடயம் மின்னல் தாக்கியதால் ஒரு இயந்திரம் செயலற்றுப் போய்விட்டது. இருந்தாலும் பாதுகாப்பாக செல்லலாம். ஆனால் விமானத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டியிருப்பதால் ஒருமணி நேரம் தாமதாக விமானம் சிட்னியை சென்றடையும்” என்ற அறிவிப்பு வந்தது.

பயணிகளிடம் தலைமை விமானியிடம் இருந்து வந்த அறிவிப்பால் பதட்டம் ஏற்பட்டிருந்தாலும் குறைந்திருந்தது. ஆனால் அந்த நிலை நீடிக்காமல் இன்னொரு மின்னல் தாக்க எதிர்பாராத விதமாக மற்றொரு இயந்திரமும் பழுதடைந்தது. ஒரு நிமிடத்தில் திரும்பவும் தலைமை விமானியிடமிருந்து அறிவிப்பு வந்தது.

இன்று எப்போதும் இல்லாதபடி வானில் சூழ்நிலை இருக்கிறது. மின்னல் தாக்கி இன்னொரு இயந்திரமும் செயல் பாட்டை இழந்திருக்கிறது. இருந்தாலும் 747 விமானத்தால் இரண்டு இயந்திரங்களுடன் பாதுகாப்பாக பறக்க முடியும். ஆனால் இரண்டுமணி நேரம் தாமதமாகும் என்றார்.

விமானம சீராக சென்று கொண்டிருந்தது. பணிப்பெண்கள் உணவு வழங்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பயணிகள் இரண்டு இயந்திரங்கள் பழுதடைந்த நிலையை மறந்திருந்தனர். அப்பாதுதான் பட்டகாலிலே படும் என்பதுபோல் பளிச் பளிச் என்ற மின்னல் கண்களைப் பறிக்கும்படி வெட்டின.

அறிவிப்பைத் தொடரந்து விமான பணிப்பெண்கள் பணியை நிறுத்தி தங்கள் இடத்திற்கு சென்று அமர்ந்தனர். விமானம் பறப்பதிலும் சற்று வேறுபாடு தெரிந்தது. திரும்பவும் அறிவிப்பு வந்தநு.

தலைமை விமானிதான் அறிவிப்பைச் செய்தார். நமக்கு இது ஒரு சோதனையான நேரம். ஏற்கனவே இரண்டு இயந்திரங்களை இழந்திருக்கும் சமயத்தில் இப்போது மூன்றாம் முறையாக இன்னொரு இயந்திரத்தின் செயல்பாட்டையும் மின்னல் தாக்கி இழந்து விட்டோம் என்றார்.

இருந்தாலும் பயணிகள் நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த விமானத்தின் சிறப்புத் தன்மையே ஒரே ஒரு இயந்திரத்துடன் பாதகாப்பாக பறக்க முடியும் என்பதுதான் என்றார். ஆனால் ஒரே ஒரு அசௌகரியம். அது என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்துல் விமானம் சிட்னியில் தரையிறங்காது. மூன்றுமணி நேரம் தாமதித்தே போய்ச்சேரும். எதிர்பாராமல் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துகிறேன் என்றுகூறி அறிவிப்பைத் துண்டித்தார்.

ஒரே ஒரு இயந்திரத்தோடு பறந்து கொண்டிருப்பதால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று பயணிகள் பதற்றமும் கவலையும் கொண்டிருந்தனர். சிலர் விருப்பமான கடவுளை வேண்டிக் கொள்ளவும் ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட களேபரத்திலும் அந்த விமானித்தில் பயணித்த புள்ளிவிவர நிபுணர்களின் எண்ணம் வேறுமாதிரி இருந்தது.

அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமக்கு நேரம் நல்லா இருக்கவேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இயந்தரங்களும் பழுதானால்லும்கூட மூன்று மணி நேரம் தாமதித்தாவது சிட்னி சென்றுவிடலாம். ஒருவேளை இந்த இயந்திரமும் பழுதடையுமானால் ஆகாயத்திலேயே இருக்க வேண்டியதுதான் என்றாராம்.

இது நகைச்சுவையாக எழுதப்பட்ட கற்பனைக் கதையின் பகிர்வு என்றாலும் படித்த மேதாவிகள் இப்படியும் இருக்கிறார்கள் என்றான் ரகு. அதை ஆமோதிப்பது போல் நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை என்றாலும் உண்மையிலும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன என்றான் விமல்.

விமல் சொன்னதை ரகுவால் நம்ப முடியவில்லை. அவனுக்கு உணர்த்துவதற்காக சில உண்மைச் சம்பவங்களையும் கூறினான்.
பிடுங்க வேண்டிய பல்லுக்கு பதில் வேறு பல்லைப் பிடுங்கிய பல் மருத்துவர் பற்றியும் அறுவை சிகிச்சையின்போது கத்திரியை உள்ளவைத்து தைத்த அறுவைசிகிச்சை நிபணர் பற்றியெல்லாம் கேள்விப் பட்டதில்லையா? என்று விளக்கினான் விமல்.

இவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்கும் போது நமக்கும் சந்தேகம் வருகிறதல்லவா? அந்த புள்ளிவிபர நிபுணர்களைப்பற்றி நகைச்சுவையாக கதை எழுதப்பட்டதா? அல்லது உண்மையிலேயே அவர்கள் அப்படித்தானா? என்பதை உங்களிடமே விடுகிறேன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *