பலதும் பத்தும்

“நான் தவறு செய்துவிட்டேன்” – போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் நேற்று கைதான ஸ்ரீகாந்த் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன்.

மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஸ்ரீகாந்த் பிணை கோரினார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு ‘கொகைன்’ விநியோகம் செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜோன் (38) என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஜோன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார்? என்ற பட்டியலை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

அந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து பொலிஸார் நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்தார். ஆனால் அவருக்கு அடிக்கடி போதைப்பொருள் விநியோகம் செய்ததாக ஜோன் குறிப்பிட்டிருந்தது பொலிஸாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் பொலிஸார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button