இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் – அம்பாறையில் சம்பவம்

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்ற போது பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரால் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை என்ற விடயத்தினால் இப்பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு தவிசாளரது பெயரை கூறி வருகை தந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கில் எங்கும் செல்வேன். என்னை எவராலும் தடுக்க முடியாது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிரிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்து இருக்கின்றார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட சிறு சலசலப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மாத்திரமல்ல தமிழன் என்ற அடிப்படையில் வடகிழக்கு பூராகவும் எங்களது இனத்துக்காகவும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வேண்டி தற்போதைதும் இளம் சந்ததிகள் மற்றும் சமூகங்கள் எதிர்காலத்தில் கடத்தப்படக்கூடாது என்பதற்காகவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றேன்.

இருந்தபோதிலும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு தடை ஏற்படத்தியுள்ளார்.

ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். இவ்வாறான விடயங்களை தவிசாளர் என்பவர் செய்யக் கூடாது. அவ்வாறான அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் .

நானும் முன்னாள் தவிசாளர் என்று முறையில் எனக்கு தெரிந்த விடயத்தில் இவ்விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனெனில் எமது வடகிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறான போராட்டங்கள் நடந்து வருகின்றது.

அதன் அடிப்படையில் நேற்று போராட்டம் நடைபெற்ற போது சிலர் மதுபோதையில் தவிசாளரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டும் நீங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட முடியாது என்றும் காரைதீவில் இருந்து இங்கு வர முடியாது என்று கூறினார்.

நான் தமிழன் என்ற ரீதியில் எங்கு சென்றும் குரல் கொடுப்பேன் முடிந்தால் நான் இன்று மது போதையில் எங்களை எதிர்த்தவர்களுக்கு பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும்.

கடந்த ஆட்சி காலத்தில் ஒட்டுக் குழுக்களின் பின்னணியிலிருந்து இந்த இடத்தில் பல தடவை நான் அச்சுறுத்தப்பட்டேன். ஒரு தடவை கடத்தப்படவும் இருந்தேன்.

பாதுகாப்பான முறையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்த திருக்கோவில் மக்கள் எனது வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டார்கள். அவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம் பெற்றிருக்கின்றது.

இனிய பாரதி என்பவர் ஆயுத குழுக்களுடன் இயங்குகின்ற போது கூட நான் இந்த மக்களுக்கு உயிரை துச்சமாக மதித்து போராடியவர்.

ஆனால் இன்று என்னை மது போதையில் வந்து தாக்க முற்பட்டு காரைதீவு பகுதியில் இருந்து திருக்கோவில் பகுதிக்கு எவ்வாறு வருவீர்கள் என்றும் உங்களுக்கு இடுப்பில் பலம் இருக்கின்றதா என்று என்னிடம் கேட்கின்றார்கள்.

மேலும் நிச்சயமாக எனது இடுப்பில் பலம் இருக்கின்றது. முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் பிறந்தவன் நான். எல்லா தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழன் என்ற அடிப்படையில் நான் போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளேன்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *