இலங்கை

“ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக கைதிகள் விடுதலை” – விசாரணையில் தகவல்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த வெசாக் தினத்தன்று சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக, சில கைதிகளை சிறைச்சாலை நிர்வாகம் சட்டவிரோதமாக மன்னிப்பு வழங்கி விடுவித்ததாகக் கருதப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, கடந்த 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலத்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அது குறித்து விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆவணங்களைப் பரிசீலித்து அவரிடமிருந்து வாக்குமூம் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, இந்த பொது மன்னிப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த வெசாக் தினத்தன்று சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்து கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விசாரணையில், இதற்கு முன்னரும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவிருந்த கைதிகளில் அனுமதி பெறப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களை சிறைச்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *