முகநூல்

அவள் மெதுவாகச் சொன்னாள்

“மருத்துவரை அழைக்காதே… நான் அமைதியாக உறங்க விரும்புகிறேன். உன் கையைப் பிடித்தபடியே.”.

மெதுவாக தலை அசைத்தேன். என் கைகளை பற்றிக்கொண்டாள். “ கூடவே இரு..”
நான் மெதுவாக பேசத்தொடங்கினேன்.

“நம் சந்திப்பு… ஞாபகம் இருக்கிறதா?”. அவள் இதழ்கள் ஒரு புன்னகைக்காய் முயன்று துடித்தன. “அந்த மழைக் காலம்… நம் முதல் பார்வை…?” பாதி திறந்த கண்களில் நீர் ததும்புகின்றது. “நம் முதல் முத்தம்…”. இப்போது முழுமையாய் இதழ்கள் புன்னகைக்க, அவள் கண்கள் ஒருமுறை திறந்து என்னை பார்க்கின்றன.

நான் பின்னிரவின் அந்த கனத்த இருளில், சொட்டுசொட்டாய் விழும் கூரை ஒழுக்குபோல் அவளுக்கான என் வார்த்தைகளை ஒவ்வொன்றாய் உச்சரித்தபடி இருந்தேன்.
அகல்விளக்கின் உதிரி நெருப்பு நடுங்கிக்கொண்டிருந்தது.

அவள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். கண்களில் மிச்சமிருந்த ஒளியே நிச்சயமாக அத்தனைக்கும் பதிலாக இருந்தது. இப்போது இருவருக்குமே அழத்தோன்றவில்லை. அவ்வப்போது அவள் புன்முறுவல் செய்கிறாள். நான் சன்னமாய் சிரிக்கிறேன். ஒரு நீண்ட பயணத்தின் எட்டிய கடைசிப் பகுதியை பார்த்து நன்றி கூறும் வழிபாட்டுச் சிரிப்பது; கழித்த வாழ்க்கை ஒரு கவிதை என்ற புரிதலில்.

அவள் மீண்டும் ஒரு முறை முழுதாய் கண்திறந்து மெதுவாகச் சொன்னாள்,
“நான் உன்னை என்றும் நேசிக்கிறேன்…”
உள்ளே பொங்கிய அத்தனை வார்த்தைகளுக்கும் பதிலாய்,
அவளது நெற்றியில் ஒரு முத்தத்தை பதிக்கிறேன்.
அவள் நெற்றி என் கண்ணீரில் நனைகிறது.
முத்தமிடும்போதெல்லாம் வழக்கமாய் அலரும் அதே சிரிப்பை இறுதியாய்
தர முயல்கிறாள்.

பின் கண்களை மூடுகிறாள் என் கையை பிடித்தபடியே, நிசப்தமாக.. அமைதியின் அகழியில் மிதந்து ஒரு நிலவாக.

அவள் கண்களில் முத்தமிடுகிறேன். காதலித்தளவுக்கு மட்டுமே வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது என்று ஒருமுறை அவள் கூறி இருந்தாள். மனதுக்குள் ஏதோ ஒன்று கைகூப்புகிறது.
“நன்றி அன்பே. போய் வா!”

Piratheesh Rani

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *